பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விருதுபெறு காதை

ககக

விருதினை வழங்க விழைந்ததவ் வரசு
வருமவ் விருதை வாங்க மறுத்த
பெருமிதம் உடையார் பிறங்குநம் மணியார்;
அரசியற் சார்பின் அமைந்தார் தமக்கே
அனைய விருதுகள்[1] அளித்தல் இயல்பு;50
கல்வித் துறையில் வல்லவர் தமக்கு
மகாமகோ பாத்தி யாயர் என்னும்
ஒருபெயர் வழங்கி உயர்த்திப் போற்றுவர்
எனினும் அதனை எல்லார்க்கும் வழங்கார்
தனியொரு வகுப்பார் தமக்கே உரிய55
சொத்தெனக் கொண்டு துய்க்க லாயினர்;
அத்தகு விருதின முத்தமிழ் வல்ல
பண்டித மணிக்குப் படைக்கமுன் வருங்கால்
தனிச்சொத் தாக்கியோர் தடைபல இழைத்தனர்
முனைத்தெழும் அரசரண் ணாமலை முயல60
மணிக்கவ் விருது வழங்க லாயினர்;
அணிக்கு மற்றோர் அணிவந் தடைந்தது;
பெற்ற விருதினைப் பேணார் சிலருளர்
உற்றஅவ் விருதுக் குரியரும் ஆகார்
சொற்புகழ் விருதுகள் சுமந்தே திரிவர்65
வருபுகழ் விலைக்கு வாங்குவோர் அவராம்;
ஒருதனி மணியோ உரியவர் ஆனார்
விருதுகள் இவர்க்கு மேன்மைகள் தந்தன
இவரால் விருதுகள் ஏற்றமும் பெற்றன;
தான்சிறி தாயினும் தக்கார்கைப் படுமேல்70
வான்சிறி தாக வளர்ந்திடும் அன்றே.


  1. இராவ் சாகிப். இராவ்பகதூர், திவான் பகதுார்.