பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அப்பொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனியாக எதிர்ப்பதைக் காட்டிலும் துணையோடு சென்று எதிர்ப்பது தான் வெற்றிக்குரிய போராட்ட முறை என்பதனால் தக்க துணையோடு (துணைவியாரோடு) ஈடுபட்டார்.

திருமணம் முடிந்த பின்னர்ச் சென்னையிலிருந்து விலகி வந்து காரைக்குடி மீ. சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக அமர்ந்து 28 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். "ஆணும் பெண்ணும் சரிநிகர்" என்ற பாரதியின் வாக்கை நிலை நிறுத்துவது போல் மகள்மார் மூவரையும் மகன்மார் மூவரையும் பிள்ளைச் செல்வங்களாகப் பெற்றுள்ளார்.

1955ஆம் ஆண்டில் குருதி உமிழும் கொடு நோய்க்கு இலக்கானார். "பிழைப்பது அரிது" என்ற நில வந்துற்ற போது புதுக்கோட்டை, அண்ணல் சுப்பிரமணியனார் தாயினும் சாலப் பரிந்தெடுத்து, நோய்நீங்கி நலம் எய்த மருத்துவர் வி. கே. இராமச்சந்திரனார் துணையோடு எல்லா வகையானும் உதவி புரிந்தார். அவ்வுதவி இயம்பத் தீரா ஏற்றமுடையது. புத்துயிர் கொடுத்த அவ்வித்தகரைத் தந்தையாகவே கருதி வருகிறார். காலத்தினால் செய்தஞாலத்தின் பெரிதாகிய அவ்வுதவியை நாடொறும் எண்ணி உருகுகின்றார்.

இடையிலே ஓராண்டு திரைப்படத்தின் ஈர்ப்புக் கவர்ச்சிக்கு ஆளாகிச் சென்னை சென்றார். அங்கு நிகழும் நிகழ்ச்சிகள் தம் இயல்புக்கு ‘‘ஏலாதன என்பதைக் கண்டு மறு ஆண்டே தமிழாசிரியப் பணிக்கு மீண்டார். .

1966இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கல்வித் துறையினரால் இவர் மீது வழக்கொன்று கொண்டு வரப்பட்டது. 'விசாரணை' நடைபெற்றது. அப்போது "இந்தியை எதிர்ப்பவன் தான் நான். அதற்கு என் பாடல்களே சான்று. ஆனால் இப்பொழுது சாற்றப்பட்டிருக்கும் குற்றங்கள் பொய்யானவை. என்மீது பழிசுமத்துவதற்காக இட்டுக் கட்டப்பட்டவை" என்று வாக்குமூலம் கொடுத்தார். ஆய்வுக்குப் பின்னர் வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது.