பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


வளரிளங் காடு சூழ்ந்து
வனப்பினிற் பொலிந்து தோன்றும்;
அளறிடை விளைந்து நிற்கும்
அணிவயல் அழகு கூட்டும்,
களமர்கள் சென்று சென்று
கடமைகள் ஆற்றி மீள்வர்,
குளமெலாம் மீன்கள் தள்ளிக்
குதித்திடுங் காட்சி யுண்டு.
9

புனல் தரு மணிமுத் தாறு
புறத்தினிற் குழ்ந்து நிற்கும்,
இனமலர் பூக்குஞ் சோலை
எழில்தரும் இயற்கைக் காட்டி
மனமதில் அமைதி காட்டி ,
மதிவளர் புலமை கூட்டும்,
கனவுல கொன்று காட்டிக்
கவிதையும் படைத்துக் காட்டும்.
10

குளங்களில் நிறையும் நீர்தான்
குறையினும் ஆங்கு வாழ்வோர்
உளங்களில் நிறையும் ஈரம்
உலருதல் என்றுங் காணார்
வளங்களிற் சுருங்கு மேனும்
வழங்கலிற் சுருங்காக் கையர்
களங்களிற் பதர்க ளுண்டு
காளையர் மணிகள் போல்வர்

11