பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


மணியுடையார் உடற்குறையைக் கருதிலராய்
மகட்கொடைக்கு முன்வந் தார்தாம்
[1]பணமுடையார் இவரென்று சற்றுமனம்
பரிதவிக்க அதனைக் கண்டு
பணமுடையார் சபைகண்ட பழநியப்பர்
பரிவுடையார் மணத்திற் கென்ன
பணந்தடையா ? கவலற்க ஈப்போவில்[2]
பங்காளி யாக்கிக் கொள்வேன் 9

மலைத்திடுதல் கைவிடுக மணஞ்செய்க
வழிசெய்வேன் என்று கூறிக்
கலைத்துறையில் வல்லகதி ரேசர்க்குக்
கடையிலொரு பங்குந் தந்தார்
நலத்தக்க மீனாட்சி, கதிரேசர்
நல்லறத்தில் துணைவரானார்
நிலைத்தக்க சபைத்தொடர்பால் மதிபெற்றார்
நிதிபெற்றார் மணமும் பெற்றார்.10

கைநிறைந்த பொருள்பார்ப்பர் பெண்பெற்றார்
கண்ணிறைந்த கணவ னைத்தான்
மைவரைந்த விழியுடைய பெண்பார்ப்பாள்
மாநிலத்தில் ஈதி யற்கை
[3]ஐவிளைந்த கொடியிடையார் மீனாட்சி,
அன்பரவர் மெய்யைப் பாரார்
[4]தைநிறைந்த மதிவிளைந்த மெய்பார்த்துத்
தரம்பார்த்து மணந்து கொண்டார். 11


  1. பணம்+முடையார்
  2. ஈப்போ - மலேசியாவில் உள்ள கடை
  3. அழகு
  4. தைமாத முழுநிலவு போன்ற பேரறிவு