பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணம் புணர் காதை


பெண்ணணங்கின் பெருந்துணிவை ஈகமிகு [1]
பேருளத்தை இரக்கப் பண்பை
எண்ணினிங்குப் புல்லரிக்கும் இருவிழிகள்
புனல்மல்கும் கிறும்பூ தாகும்
அண்ணலிங்குப் பெற்றதுணை மனவளத்தை
அளந்துரைக்க யாரே வல்லார்?
கண்ணகியைக் கண்ணெதிரே கண்டதில்லை
கதிர்மணியார் வீட்டிற் கண்டோம்12

கொண்டான்றன் குறிப்புணர்ந்து நடந்தொழுகுங்
குலமகளாய்க் கூடி வந்து
கண்டாரை விருந்தோம்பிக் காக்கின்ற
கலைமகளாய், எவரை வீட்டிற்
கண்டாலும் பணிந்துரைத்துக் கனிந்தமொழி
தருமகளாய் எளிமை பூண்டு
கண்டாரும் தொழத்தக்க திருமகளாய்க்
கற்பரசி வாழ்ந்து வந்தார் 13

கலைவாழ்வின் விளக்க மெனக் கதிரேசர்
காண்பரெனிற் கற்பின் செல்வி
கலைவாழ்வின் அமைதியெனத் திகழ்ந்திடுவர்;
கனிவாயில் மூர லொன்று
நிலையாகக் குடியிருக்கும் களங்கமிலா
நெஞ்சிருக்கும்; அங்கி ருந்து
விளைவாகும் மொழியெல்லாம் மழலையென
இனிமையினை விளைத்து நிற்கும்" 14


  1. ஈகம்-தியாகம்