பக்கம்:எங்கே போகிறோம்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. கால்நடை
பொருளாதாரச் சிந்தனைகள்

மனித வாழ்க்கையில் கால்நடைகள் வகிக்கும் பங்கு மிகவும் பெரியது ஆகும். மனிதனுக்கு உற்ற தோழமையாக வளர்ந்து, வாழ்ந்து அவனுக்கு ஊட்டம் தருவனவாகவும், ஆக்கம் தருவனவாகவும் விளங்கும் பெருமை கால்நடைகளுக்கே உண்டு.

மனிதனின் இன்றியமையாத் தேவைகளாகிய உணவு, உடை, களிப்பு, மகிழ்ச்சி, காவல் என துறைதோறும் கால்நடைகள் முக்கியமான இடத்தைப் பெற்று வந்து உள்ளன; பெற்று வருகின்றன. விவசாயத் தொழிலுக்கும் கால்நடைகள் தேவை. நிலத்திற்கு வளம் காக்கும் தொழு உர உற்பத்திக்குக் கால்நடைகள் மிகவும் தேவை மட்டுமல்ல, இன்றியமையாதவையுமாகும்.

கால்நடைகள் இல்லையேல் விவசாயம் இல்லை; உணவு இல்லை; ஏன் மனிதகுல வாழ்க்கையின் ஆதாரமே கால்நடைகள் என்றால் மிகையாகாது. அதனாலேயே செல்வத்திற்கு “மாடு” என்று பெயர் சூட்டியது வள்ளுவம்.

தமிழர் தம் அகத்திணை வாழ்விலும் கூட ஏறுதழுவுதல் என்ற துறை அமைந்துள்ளது. தொன்மையான சிவநெறியில் எருது சிறப்பான இடத்தை, சிவபெருமானுக்கு ஊர்தியாகவும், உயர்த்திப்பிடிக்கும் கொடியாகவும், சிறப்பிக்கப் பெறுகிறது. தைத் திங்களில் பொங்கலின் போது, மாட்டுப் பொங்கலும் உண்டு.