பக்கம்:எங்கே போகிறோம்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. பொருளாதார வளர்ச்சியில்
கூட்டுறவின் பங்கு

மனித சமுதாயத்தில் மதிப்பீட்டுக் கொள்கை காலந்தோறும் மாறிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் அரச பதவிகள் மதிக்கப் பெற்றன. ஆட்சித் திறனும் செங்கோன்மையுமே மதிக்கப்பெற்றன. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அரசர்கள் எல்லோரையும் மனித குலம் மதிக்கவில்லை. புலமைக்கு, திறமைக்கு, தவத்திற்கு மதிப்பு என்றெல்லாம் இருந்து வந்துள்ளன.

இன்றைய சமுதாயத்தில் பணத்திற்கே மதிப்பு. இதனால் இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு உடமை சேர்க்கும் சமூகத்தின் பழைய போக்குகள்-மதிப்புக்கள் இன்னமும் மாறவில்லை. இந்த மதிப்புக்குப் பதிலாகப் புதிய மதிப்புக்கள் தோன்ற வேண்டும். அதாவது மனித மதிப்பீட்டுக் கொள்கைகள் உருவாக வேண்டும்.

நமது நாட்டில் ஏழைகளின் தொகுதி மிகுதி. இந்த ஏழைகளுக்கு வாழ்க்கையில் ஆக்கமும், பாதுகாப்பும் தரக்கூடியதும், மனித மதிப்பீட்டுக்குச் சமுதாயம் உருவாகத் துணை செய்வதும் கூட்டுறவு ஒன்றேயாம்.

ஜனநாயக முறையில் பொருளாதார முன்னேற்றம் காண்பதில் பகை வராது. வன்முறைக்கு அதில் வழியில்லை. அமைதியான சகோதர அன்பின் அடிப்படையில் எளிதாகப் பொருளாதார முன்னேற்றம் காணக் கூட்டுறவு துணை செய்யும்.