பக்கம்:எங்கே போகிறோம்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132 எங்கே போகிறோம்

அடிப்படைகளைத் தகர்க்கின்றன; மனிதனைப் பிரித்து விடுகின்றன.

இன்று ஊர், அரசுக் கணக்கின்படிதான் உள்ளது. ஊர் என்று இலக்கணப்படி “ஒருவருக்காக எல்லாரும், எல்லாருக்காகவும் ஒருவர்” என்ற இலட்சியம் மக்களிடத்தில் இல்லை, ஆரோக்கியமில்லாத போட்டிகள், இலாப வேட்டைகள், தலைமைத்தனத்திற்கு ஆசை முதலியன ஊரை நாள்தோறும் அழித்து வருகின்றன. இவற்றை நாளும் எதிர்த்துப் போராடிச் சமுதாயத்தை விரிவாக்க வேண்டும்; இலட்சியத்தை உருவாக்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் மனிதகுலத்தில் ஏற்பட்டுள்ள பிரிவுகளை அகற்றி, மனிதகுலத்தைச் சமுதாயமாக உருவாக்கலும், ஊர் கூடிவாழ அமைத்தலும் கூட ஒரு நல்ல இலட்சியமாகும். இந்த இலட்சியத்தை இந்தத் தலைமுறையில் அடைந்தால் இந்தியா வளரும்; வாழும்!

“பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை” என்பது வள்ளுவம்! “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும் என்பது மாணிக்கவாசகரின் வாக்கு சமூகத்தை இயக்கும் சக்தி பொருளுக்கே உண்டு நமது நாடு, வளமான நாடு பொருள் உற்பத்திக்கு ஏற்ப, இயற்கை வளமும் மனித சக்தியும் உள்ள நாடு. ஆயினும், இந்தியர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்.

ஏன்? உடைமை உடையவர்களிடத்தில் உழைப்பைக் காண்பது அரிது! உழைப்பவர்களிடத்தில் உடைமையைக் காண்பது இயலாது. இது நாட்டின் சமூக, பொருளாதார அமைப்பு.

நமது நாட்டில் சோஷலிசம் அல்லது சர்வோதயம் அல்லது பொதுவுடைமைச் சமுதாயம் காண இயலாது.