பக்கம்:எங்கே போகிறோம்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138 எங்கே போகிறோம்?

பிறருக்கென முயலும் வாழ்க்கை நெறி, ஆன்மிக நெறி. தியாகங்கள் செய்வது, ஆன்மிக வாழ்க்கையின் அடையாளம். “தியாகமில்லாத வழிபாடு பயனற்றது” என்றார் அண்ணல் காந்தியடிகள்!

நாம் அனைவரும் ஆன்மாவில் சிறந்து விளங்குவதே இலட்சியம்! ஆன்மாவை உசுப்பிக்கொள்ள, விழிப்புறச் செய்யத் தேவையான அளவு சடங்குகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், சடங்குகளே ஆன்மிகம் அல்ல; சமயமும் அல்ல!

எங்கும் சோலைகளை வளர்ப்போம்! இயற்கையோடு இயைந்து வாழ்வோம்! நெஞ்சத்தை தண்ணளி உடையது ஆக்குவோம்! அன்பில் வளர்வோம்! அன்பில் வாழ்வோம் வாழ்வித்து வாழ்வோம்!, உயிர்க்கு ஊதியம் சேர்க்கும் தொண்டு செய்வோம்! வன்முறை தவிர்ப்போம்! எங்கும் எந்தச் சூழ்நிலையிலும் கொலையை பழிதூற்றும் சிறுமையைத் தவிர்ப்போம்! யாரிடமிருந்தும் எவரிடமிருந்தும் அந்நியமாக மாட்டோம். ஒருமையுணர்வுடன் எவ்வுயிரிடத்தும் பேதமுறாது பேணிக் காப்போம்!

மானிட சமுத்திரம் நம்முடன் பிறந்து வளர்ந்தது; உடன் வருவது. அந்த மானிட சமுத்திரத்திற்குள் சங்கமம் ஆவதே ஆன்மிக வாழ்வு! “இவர் தேவர், அவர் தேவர் என்று இரண்டாட்டாது சமயக் கலகம் செய்ய வேண்டாம்! என்றார் அப்பரடிகள் “ஒன்றே குலம், ஒருவனே தேவன்!” இதுவே ஆன்மிக வாழ்க்கையின் தாரகமந்திரம்.

“ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி”

என்ற சிந்தனை நமது வாழ்வாக மலரவேண்டும்.