பக்கம்:எங்கே போகிறோம்.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166 எங்கேபோகிறோம்?

இந்த ஆன்மிக வழியில் நடவாமல் இப்போது அசுர வழியில் போய்க்கொண்டிருக்கிறோம். அதன் விளைவு பாதுகாப்பும், உத்திரவாதமும் இன்மை! வறுமைக்கோடு! துன்பங்கள்! துயரங்கள்! இனிமேலாவது நாளும் நமது ஆன்மாவின் தரத்தை, நலத்தை வளர்த்துக் கொள்வோம் இம் மாநிலம் பயனுறும் வழியில் வாழ்வோமாக! ஒருவன் உலகத்தையே பெற்றாலும், தனது ஆன்மாவை இழந்து விடுவானாயின் என்ன பயன்?

இன்று ஆன்மாவை இழந்து, பொக்குகளாக, வெற்றர்களாக; வாழ்வோர் பலர். இவர்களை “இந்த வையகம் சுமப்பதுவும் வம்பு” என்றார் ஆண்டாள் நாச்சியார் சமுதாயம் தழீஇய ஆன்மிக வாழ்க்கையே வாழ்க்கை. சமுதாயத்தைப் பற்றியுள்ள துன்பங்கள் அனைத்தும் அகலத் தன்னந்தனியாகவும், கூட்டமாகவும், ஆன்ம வாழ்க்கை வாழ்வோம்! வளர்க. ஆன்மிகம்! வளர்க சமுதாயம்!

கடவுளே கூட வான் பழித்து, இம்மண்ணிற்கு வந்தது மனிதனோடு கூடிவாழத்தான்! அதில் ஒரு தனி இன்பம். அந்த இன்பம் நிறைந்த வாழ்க்கைக்குத்தான் ஆன்மிகம் என்று பெயர்.

★★★

22-10-94 அன்று மதுரை வானொலியில் ஒலிப்பரப்பாள உரை.