பக்கம்:எங்கே போகிறோம்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கேபோக வேண்டும்? 171

மனிதகுல வரலாற்றை உருவாக்குவதில் மத்தியதர வர்க்கத்திற்கு ஒரு இடம் உண்டு! சமுதாய மாற்றத்தை மத்தியதர வர்க்கமே உருவாக்க இயலும். இன்று நமது நாட்டு மத்தியதர வர்க்கம் நுகர்பொருள் சந்தையில் மூழ்கி விட்டது. மூளைச் சோம்பலுக்கு இரையாகி விட்டது. ஏழைகள் நிலையான தீர்வுகாண விரும்பவில்லை. இனாம், இலவசம், இவற்றையே நம்பி வாழ்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் என்று பொழுது விடியும் என்று எதிர்பார்த்துக் கிடக்கின்றனர். பொழுது விடியாது! நாமாகத்தான் விடியவைக்க வேண்டும்.

ஜனநாயக மரபுகளைப் பயிற்றுங்கள்! கூடிச் சிந்தனை செய்யுங்கள்! கூடிவாழக் கற்றுக்கொள்ளுங்கள்! ஒருவர் எல்லாருக்காகவும், எல்லோரும் ஒருவருக்காகவும் என்று வாழக் கற்றுக்கொள்ளுங்கள்! மக்களுக்கு நன்னடை நல்கும், அரசைப் போற்றுவோம்!

நிலத்தில் நாம் பிறக்கின்றோம். நிலத்திலேயே வாழ்கின்றோம். நிலமே நமக்கு உணவுப் பொருள்களைத் தந்து வாழ்வளிக்கிறது. இறுதியிலும் நிலத்தின் மடியையே சரண் அடைகின்றோம். நிலத்தை நம்மிடமிருந்து பிரிக்க முடியாது. இந்நிலத்தைப் பேணுங்கள்! நிலத்தின் தரத்தைக் காப்பாற்றுங்கள்! நிலத்தில் மரங் களை நடுங்கள்! பயிர்களைச் சாகுபடி செய்யுங்கள். எங்கும் பசுமை போர்த்திய நிலத்தையே காண்க!

விலங்குகள், பறவைகள் துணையின்றி மனிதன் வாழ்தல் இயலாது. கால் நடைகள் செல்வம். கால்நடை வளர்த்தல் பன்முகப் பயன்தரும் தொழில். பால் மாடுகள் நமக்குப் பூரண சத்துணவாக விளங்கும் பாலைத் தருகின்றன. நிலத்திற்கு உரமளிக்கின்றன. ஆதலால்