பக்கம்:எங்கே போகிறோம்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. உழைப்புச் சிந்தனைகள்


இன்றைய மனிதன் படிக்கிறான்; பட்டதாரியாகிறான்; அறிஞன் ஆகிறான். அறிவின் பயன், என்ன செய்யவேண்டும் என்று அறிந்து செய்தலேயாம். செயல், உழைப்பின் பாற்பட்டது. உழைப்பற்ற செயல்களும் உண்டு. ஆயினும் உண்ணல், உடுத்தல், காதல் செய்தல் ஆகிய நுகர்ச்சிகளுக்கும் உழைப்பு இன்றியமையாதது.

ஏன்? மனிதன் விலங்குகளின்றும் வேறுபட்ட நிலை, உணவைத் தேடும் நிலையில்தான் தொடங்கியது. பின்னாளில் அவன் வளர, வளர உணவைத் தேடாமல் படைத்தான். இந்தக் காலக்கட்டத்தில் உழைப்பு வளர்ந்தது; கருவிகளுடன் மனிதனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஆக, உழைப்பே வாழ்வு என்றாகிறது. உழைப்பிற்கே உரியது வாழ்வு.

வாழ்வு, உழைப்பினாலாயது. வாழ்வினால் உழைப்பு வளர்கிறது. உண்ணும் உணவைத் தனது கடின உழைப்பால்-நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துப் படைத்து உண்பவர்கள் நல்லவர்கள்; உத்தமர்கள்! "உழைத்தால்தான் உணவு" என்ற சட்டம் வேண்டும் என்றான் ஜான்ஸ்மித்.

இந்தச் சட்டத்தை உலக நாடுகள் இயற்றவேண்டும். அதற்கு நாம் எல்லாரும் கீழ்ப்படிய வேண்டும். அண்ணல் காந்தியடிகள் "உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள்" என்றார்.