பக்கம்:எங்கே போகிறோம்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48எங்கே போகிறோம்?

கூடாது. உழைப்பாளர்களின் முன்னேதான் கடவுள் வாய்ப்புக்களை அருளிச் செய்கிறான்.

ஆதலால் ஊழ், நல்ல நாள், கெட்ட நாள் என்ற எண்ணத்தில் உழைப்பை ஒத்திப்போடக் கூடாது. உழைப்பைத் தவிர்க்கக் கூடாது. கடின உழைப்பே கடவுள் பக்தியின் அடையாளம். உழைப்பின் பயனை, ஆக்கத்தை, மற்றவ்ர்க்கும் வழங்கி வாழ்விப்பது ஆக்கம். உழைப்பு நிறைந்த வாழ்க்கையே நோன்பு.

உழைக்கும் கால்களே தவம் செய்யும் தாள்கள் என்றது புறநானூறு. உழைக்கும் எருதே நந்தம். கடவுட் கொடியின் சின்னம். ஏறுதான் இறைவன் ஊர்தி, எருது உழைப்பின் சின்னம், “உழுத நோன்பகடு அழிதின் றாங்கு” என்பது புறநானூறு.

உழைப்புக்கு ஊக்கம் தேவை. ஊக்கமே உடைமை என்று கூறும் வள்ளுவம். “உள்ளம் உடைமை உடைமை” ஒருவன் செல்வந்தனாய் இருப்பதை விட உழைப்பாளியாக இருப்பது உயர்வு. செல்வம் அழியும். உழைப்புத் திறன் அழியாது. ஊக்கம் என்பது உள்ள எழுச்சி, பணிமேற் செல்வதற்குரிய பாங்கு. ஔவைப் பாட்டியாரும் “ஊக்கமது கைவிடேல்” என்றார்.

உழைத்தால் முன்னேறலாம். இது பொதுவிதி. ஆனால் நம்முடைய நாட்டில், உழைத்தாலும் முன்னேற இயலவில்லை. ஏன்? பெரும்பாலோர் சொத்து இல்லாதவர்கள். சொத்துடமையாளரைச் சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது. பிழைப்புக்கு வழி கூலியுழைப்பே.

சுரண்டுகிற பொருளாதாரம் உள்ளவரையில் உழைப்பு பூரண ஆக்கத்தைத் தராது. செல்வம், செல்வமுடையோர் இடத்திலேயே சேருகிறது. ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர்.