பக்கம்:எங்கே போகிறோம்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56 O எங்கே போகிறோம்?

ஏன்? முதல் தடை பழமையின் மீது பாசம். இரண்டாவது தடை, படையெடுத்து வந்த அயல் வழக்குகளை ஆய்வு செய்யாமல் அப்படியே ஏற்பது. குறிப்பாகச் சொல்லப்போனால், இன்று தமிழர்கள் சாமர்த்தியசாலிகளாக விளங்குகின்றனர்.

சாமர்த்தியம் என்ற சொல், தமிழ்ச் சொல் அல்ல. ஆனால் பெருவழக்காக வழங்குகின்றது. சாமர்த்தியம் என்ற சொல்லுக்கு நேரிடையான தமிழ்ச் சொல் இல்லை. சாமர்த்தியம் என்பது வேறு திறமை என்பது வேறு. திறமை, நல்ல காரியங்களுக்குப் பயன்படுவது.

தமிழ் மொழிக்கும், பழங்காலத் தமிழர்களுக்கும் சாமர்த்தியம் இருந்ததில்லை. ஆனால், இன்றைய தமிழர்களுக்கு சாமர்த்தியம் கை வந்த கலையாக இருக்கிறது. இன்று தமிழரில் பலர் சாமர்த்தியத்திலேயே வாழவாழ்ந்து முடிக்க விரும்புகின்றனர்.

இன்று யாரும் சாதனைகளைப் பற்றி, மனித உறவுகளைப் பற்றி, சமூக மேம்பாடுகளைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இன்று நம்மிடையில் சாமர்த்தியசாலிகள் பலர் உண்டு. திறமைசாலிகள் மிகவும் குறைவு.

சாதனைகள் செய்வதன் மூலம் புவியை நடத்துகிறவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. குறைபாடுகளைக் களையும் நோக்கத்தைவிட குறைபாடுகளை நியாயப்படுத்தும் வகையில் சமாதானம் கூறிவிட்டு நழுவிவிடுபவர்களே இன்று மிகுதி.

இன்று எங்கும் கேட்கும் முழக்கொலி 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்', “ஒன்றே குலம், ஒருவனே தேவன்!” என்பவை. ஆனால் உண்மையில் நடப்பதோ, நாளும் சாதிச் சங்கங்களும் அவ்வழி கலகங்களும் தோன்றி வளர்ந்து வருகின்றன.