பக்கம்:எங்கே போகிறோம்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72 O எங்கே போகிறோம்?

அடுத்து சிறந்த அறிவியல் தொழில் நுட்பம் இருக்க வேண்டும். நமது நாட்டில் அறிவியல் மேதைகள் நிறைய உண்டு. அறிவியல் தொழில் நுட்பங்களும் உண்டு. முதலீட்டுக்குப் பஞ்சமே இல்லை. நிறைய முதலீடு செய்வதற்குரிய பணம் இருக்கிறது. ஆனால் பொருளாக்கத்திற்குத் துணை செய்யும் வழியில் முதலீடு செய்ய முன் வருவதில்லை.

மனித ஆற்றல் நம்மிடத்தில் நிறைய உண்டு என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆயினும் பொருளாதார வளர்ச்சி மனநிறைவு தரத்தக்க வகையில் இல்லை. நல்ல நிர்வாகமும், கடின உழைப்பும் தேவை.

அடுத்து ஒரு தொழிலில் லாபம் என்றால், ஆட்டு மந்தைகளைப் போல அந்தத் தொழிலிலே பலரும் முயன்று, அந்தத் தொழிலில் உற்பத்தியைப் பெருக்கி, விலையை இறங்கக் செய்து, ஆரோக்கியமில்லாத போட்டியால் தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்கின்றனர். தாமும் கைம்முதல் இழந்து அல்லற்படு கின்றனர். பொருளாதார ஆக்க முயற்சிகளில் புதிய புதிய யுக்திகள் தேவை; வழிமுறைகள் தேவை. இதைத்தான் திருவள்ளுவரும்,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”

என்று கூறுகின்றார். இயற்றல் என்பது பொருள் உற்பத்திக்குரிய புதிய புதிய வாயில்களைக் காணல். பொருள் தேடும் முயற்சிகளில் புதியன காண்போர், தோன்றாததற்குக் காரணம்-அல்லது அதில் கருத்து நாடாமைக்குக் காரணம்-அதில் வருவாய் வருமா என்ற ஐயம் சோதனைகளை ஏற்கத் தயக்கம்!