பக்கம்:எங்கே போகிறோம்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78 எங்கே போகிறோம்?

பண்ணைகளைத் தொடங்கி, வேலை வாய்ப்புக்களை வழங்கினால் உற்பத்தி பெருகும்.

நியாயமான வழியில் பூரண வேலை வாய்ப்பை உண்டாக்குவது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரே வழி! பூரண வேலைத் திட்டம் சமத்துவ சமுதாய அமைப்பிற்குரிய முதல் முயற்சி. பூரண வேலைத் திட்டம் என்பது சக்திக்கேற்ற வேலை-வேலைக்கேற்ற ஊதியம் என்பதாகும்.

இன்று வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து, வேலைக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட 20 மடங்காகப் பெருகியுள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்திருப்போரில் 10 சதம்தான் வேலை பெறுகிறார்கள். இதுபோக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியாமல் உள்ளவர்கள் வேறு கணிசமாக உள்ளனர்.

இனி, வருங்காலத்தில் நம்முடைய அரசுப் பணிகளிலும் சரி-வியாபாரத் துறையிலும் சரி-சேவைத் துறையிலும் சரி-வேலை வாய்ப்புக்கள் உருவாகுமா? இது ஐயப்பாடே! புதிய தொழில் ஆலைகளைத் தொடங்குவதன் மூலமே வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் வாய்ப்புகளும் ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது என்ற வருந்தத்தக்க செய்தியை அரசும் சமூக நிறுவனங்களும் உணரவேண்டும். மேலும், ஒரு வருந்தத்தக்க செய்தி. படிப்புக்கேற்ற வேலையைக் கூட பெற முடியவில்லை.

நமது நாட்டில் குறைவான வேலை பார்த்து பற்றாக்குறை ஊதியம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.