பக்கம்:எங்கே போகிறோம்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேளாண்மைச் சிந்தனைகள் 93

அவை, பெய்யும் மழை நீரை நிலத்துக்குள் செலுத்தி நிலத்தடியில் நீரைத் தேக்கி வைத்து, கிணறுகளில் நீர் வளத்தைப் பாதுகாத்துத் தரும். புவியீர்ப்பு ஆற்றல் நீர்த் திவலைகளை நிலத்துக்குள் இழுத்து வைத்துச் சேமிக்கிறது.

இங்ஙனம் மரம், புல் முதலியவைகளால் மழை நீரை முறைப்படுத்திய மிதமான நீரோட்டமாக அமைய விடாமல், ஓடையாக விரிவடைந்து ஓட அனுமதித்தல் கூடாது. உடன் தடுத்துச் சீர்செய்ய வேண்டும். இல்லையேல் அவை மாபெரும் ஓடைகளாகி நிலம், பண்ணை, ஊர் முழுதும் கூட அழித்துவிடும்.

வேளாண்மை பொருளாதாரத்தில் நிலமும் நிலத்தின் வளமும் பெரும்பங்கு வகிப்பதால் மண்வளம் பற்றியும் மண் அரிப்பைப் பற்றியும் அதிகம் சொல்ல நேரிட்டது.

வேளாண்மைக்கு அடிப்படையான மண்வளத்தைப் பற்றி அறிந்துகொண்டோம். நமது தமிழ் நாட்டின் நிலப்பரப்பு, பெய்யும் மழை, இயற்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உள்ள தொழில், பழமரம் வளர்ப்பு. செம்மண் சரளை கலந்ததாக இருப்பதால் மாவும், பலாவும் நன்றாக வளரும்.

மாவிற்கு, வைத்த முதலாண்டிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். பின் வரும் ஆண்டுகளில் மழைநீர் மரத்தைச் சுற்றித் தங்குவதற்கு ஏற்றவாறு மண்ணை கட்டினாலும், நிலத்தை உழுதாலும் போதும். தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதிக முதலிடும் தேவையில்லை. ரூ 5000 இருந்தால் போதும். பின் ஆண்டுதோறும் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் ரூ 2000 வரை செலவாகும்.