பக்கம்:எங்கே போகிறோம்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேளாண்மைச் சிந்தனைகள் O 95

மாவட்டத்திலுள்ள நேமம், அரசு பழப் பண்ணையை நாடலாம்.

நமது நாட்டில் பலபகுதிகளில் தென்னை நன்றாக வளரும். தென்னை, நல்ல பணப் பயிர்; நல்ல வருமானம் தரக் கூடியது. தென்னை ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 வரை நடலாம்.

சில உயர்ரகங்கள் அல்லது கவனிப்பு அடிப்படையில் 5 வருடத்திலேயே காய்ப்புக்கு வந்து விடும் காலதாமதமாயின் 7 வருடங்களில் காய்க்கத் தொடங்கிவிடும். நல்ல முறையில் உரம் வைத்து மாதம் 2 தண்ணீர் பாய்ச்சினால் ஒரு மரம் சராசரி 200 காய் காய்க்கும். குறைந்தாலும் 100 காய்க்குக் குறையாது.

ஆனால், நாட்டில் இப்போது சராசரி மரம் ஒன்றுக்கு 80 காய்தான் காய்க்கிறது. 200-க்கும் 50-க்கும் உள்ள வித்தியாசம் இழப்பு இது நம்முடைய பொருளாதாரத்தைப் பாதிக்கும். சராசரி ஒரு தென்னை ஆண்டு ஒன்றுக்கு ரூ 800 கொடுப்பதற்குப் பதில் ரூ 240 தான் தருகிறது.

இந்தியப் பொருளாதாரத்தில் தேங்காயின் பங்கு கணிசமானது. ஆதலால், தென்னையை நன்றாகப் பராமரித்து உரிய பயனை அடைவதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும். நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயப் பொருள்களின் விலைக் கொள்கை, விவசாயிகளுக்கு ஏற்றதாக இல்லை. விவசாயப் பொருளாதாரத்தில் ஏற்படும் இலாபத்தைப் பெரும்பாலும் இடைத் தரகர்களே அடைகின்றனர்.