பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

என் பார்வையில் கலைஞர்



இதற்காக இந்த அமைச்சரிடம், யாருக்குமே தலை வணங்காத எனது இனிய தோழர் எஸ் ஆர். பால சுப்பிரமணியம் அவர்கள் தம் சுயமரியாதையையும் ஒரு பொருட்டாகக் கருதாது வாதாடிப் போராடினார்.

தமிழக கள விளம்பரத்துறை இயக்குநர் என்ற முறையில் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் செய்து உரையாற்றிய நான், இந்தக் காலடி கலாச்சாரத்தைப் பொதுப்படையாகவும், ஜெயலலிதாவைக் குறிப்பது போல் மறைமுகமாகவும் சாடி இருக்கிறேன். பொதுமக்களுக்கு ரோஷம் வந்ததை நேராகவே கண்டேன். ஆனால், இனமானத் தளபதி வீரமணி செய்ய வேண்டியதை, சாதாரண அரசு ஊழியரான என்னால் தொடர்ந்து வலுவாகக் கொண்டு செலுத்த முடியவில்லை.

கலைஞரின் கழகம் உள்ளிட்ட அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழர் இயக்கங்களும், இந்தக் காலடி கலாச்சாரத்தைக் கண்டு கொள்வதே இல்லை. அனைத்துக் கட்சிகளும், கண்ணிரண்டையும் விற்றுத் தேர்தல் சித்திரம் வாங்கவே முற்படுகின்றன. இவை போதாது என்று, ஒரு சில உதிரிக் கட்சித் தலைவர்கள் செல்வி. ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்று, தேம்பித் தேம்பி அழுது, கூட்டணி வைத்துக் கொண்டதும், தலையைச் சொரிந்து கொண்டு பணம் வாங்கிக் கொண்டதும் பலருக்குத் தெரியும். எனக்கும் தெரியும். ஆனால் -

இணையாக நடத்தும் கலைஞர் என்று வந்து விட்டால் மட்டும், இவர்களுக்கு அடகு வைக்கப்பட்ட சுயமரியாதை வட்டியோடு வருகிறது. ரோஷமும் பொத்துக் கொண்டு வருகிறது.