பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

என் பார்வையில் கலைஞர்



என்றாலும், சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தில் இருந்த தலைமுறையில் எந்தக் கவிஞர் அழைக்கப்பட்டார் தெரியுமா? கவிதை என் கைவாள் என்று சொன்ன பொதுவுடைமை கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அல்ல... மதநல்லிணக்க கவிதைகளை ஆக்கித்தந்த முனைவர் தயானந்தன் பிரான்சிஸ் அல்ல... உவமைக் கவிஞர் சுரதா அழைக்கப்படவில்லை. குலோத்துங்கள் யுகம் என்று பிரேமா நந்தக்குமாரால் பாராட்ட பெற்றவரும், தமிழை விஞ்ஞானப்பூர்வமாக பார்த்து கவித்துவமாய் ஆக்குகிறவருமான கவிஞர் குலோத்துங்கன் (வாசெ. குழந்தைசாமி) அழைக்கப்பட வில்லை. இந்த மூத்தக் கவிஞர்களை விட்டு விட்டு சாகித்திய அக்காதெமி பழைய தலைமுறை கவிஞர் என அழைத்தது எழுத்தாளர் சுந்தரம் ராமசாமியைத் தான். அழைக்கப்பட்டவருக்கே அப்போதுதான் தான் கவிஞர் என்கிற விவரம் தெரிந்திருக்கும். எனவே, தகுதிமிக்க மண்வாசனை படைப்பாளிகளை பிறமொழிகளில் கொண்டு செல்ல மாநில சாகித்திய அக்காதெமி அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும் என்று அந்தக் குறிப்புக் கேட்டுக் கொண்டது.

கலைஞர், தமிழ் மாநிலத்தில் மண்ணின் மக்களுக்காக ஒரு தனி இலக்கிய அமைப்பு எடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்றுக் கொண்டார். அக்காதெமி என்கிற பெயர் ஒரு மாதிரி இருக்கிறதே என்று சில விளக்கங்களை என்னிடம் கேட்டார். நானும் நிறைவோடு பதிலளித்தேன். இந்தக் குறிப்பை கலைஞர் ஏற்றுக் கொண்டார்.

பத்து, பன்னிரண்டு நிமிடம் கலைஞரிடம் பேசிவிட்டு நான் விடைபெற்றேன். கீழே முதல்வரை சந்திப்பதற்காக காத்திருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரும் சிறந்த இலக்கியவாதியுமான தமிழ்க் குடிமகன் அவர்களிடம் ரகசியக் குறிப்பைத் தவிர இதர குறிப்புகளை விளக்கினேன். அவரும் கலைஞரின் அனைத்து விருப்பங்களும் செயல்படுத்தப்படும் என்று வாக்களித்தார்.