பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

145



கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமித்தோப்பு என்ற இடத்தில் மாபெரும் ஆன்மீகப் போராளியாக உதித்தவர் வைகுண்டர். வள்ளலாருக்கும், நாராயணகுருவிற்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து அவர்களுக்கு இணையாக ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியவர். அவர் வாழ்ந்த பத்தொன்பதாவது நூற்றாண்டில் நம்பூதிரிகள், பிராமணர்கள், வெள்ளாளர்கள் ஆகியோர் தவிர அனைத்து சாதியினரும் முட்டிக்கு கீழே வேட்டி கட்டவோ, தோளில் துண்டு போடவோ, நல்ல பெயர் வைத்துக் கொள்ளவோ உரிமை உள்ளவர்களாக இல்லை. முடிசூடும் பெருமாள் என்று பெற்றோரால் பெயரிடப்பட்ட வைண்டருக்குக் கூட, மேல் சாதியினரின் அச்சுறுத்தல் கலந்த வற்புறுத்தலில் முத்துக்குட்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதோடு, அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்கள் இடுப்புக்கு மேலே எந்த துணியும் போடக் கூடாது என்று இந்து மதத்தாலும், அதன் எடுபிடியான அரசாலும் தடைசெய்யப் பட்டிருந்த காலம். இந்தக் காலக்கட்டத்தில் தோன்றிய வைகுண்டர் பிராடஸ்ட் கிறிஸ்துவ என்ற பாதிரிகளான தெளவே, சார்லஸ் மால்ட் போன்றவர்களால் துவக்கப்பட்ட தோள்சீலைப் போராட்டத்திற்கு அழுத்தம் கொடுத்தவர். துண்டு போட உரிமையற்ற எளியவர்களுக்கு தலைப்பாய் கட்டிவிட்டவர். ஆடு வெட்டியும், மாடு வெட்டியும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் மாய்ந்து கொண்டிருந்த எளிய மக்களை அருவ வழிபாட்டிற்கு கொண்டு வந்தவர். ‘குகையாளப் பிறந்தவனே என் குழந்தாய் எழுந்திருடா என்று கவிமுழக்கம் இட்டவர். இந்த முழக்கம்தான் திராவிட இயக்கத்தின் குறிப்பாக கலைஞரின் தமிழ் முழக்கமானது. இந்த வகையில், வைகுண்டரைப் போலவே எளிய குடியில் பிறந்த கலைஞர், அந்த சாமித்தோப்பு ஆன்மிகப் போராளியின் ஒரு நவீன, சமூக பதிப்பு என்பதே என் கருத்து. இதை கலைஞருக்கு எடுத்துரைப்பதில் எந்த அளவிற்கு வெற்றிப் பெற்றேனோ எனக்குத் தெரியாது. இதுவரையும் சாமித்தோப்பு ஆசாமித் தோப்பாகவே இருக்கிறது.

எ.10