பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

151



பொதுவுடைமை தலைவர்களோடு ‘தோழரே’ என்று இணையாக பழகும் சின்னப்ப பாரதியே அசந்து போனார். ‘என்னங்க கலைஞர் இவ்வளவு எளிமையாக இருக்கிறார். எவ்வளவு அன்பாக இருக்கிறார்’ என்று கோபாலபுரத்தில் இருந்து ராதாகிருஷ்ண சாலை வருவது வரைக்கும் சொல்லிக் கொண்டே இருந்தார். பிறகு என் சட்டையைப் பிடித்து இழுத்து நிற்க வைத்து ‘என்ன சமுத்திரம்! கலைஞர் கிட்ட போய் அவ்வளவு சர்வ சாதாரணமா பேசுறீங்களே. நான் அவர் பார்க்க தயங்கினேன் என்பதை கூட சொல்றீங்களே’ என்று ஆச்சரியப்பட்டார். உடனே நான், ‘ஒரு மகத்தான் தலைவரிடம் அப்படி சொல்லக் கூடாது. ஆனால், கலைஞர் மாபெரும் தலைவர் மட்டும் அல்ல... தலைசிறந்த இலக்கியவாதி. நான் பேசவில்லை; அவர்தான், தனது சொல்லாலும் செயலாலும் என்னை அப்படி பேச வைக்கிறார்’ என்று குறிப்பிட்டேன்.

பொதுவுடைமை கட்சிக்காரர்கள் அரசியல் ரீதியாக கலைஞரிடம் இணைவதும் உண்டு. பிரிவதும் உண்டு. பலமாக ஆதரிப்பதும், கடுமையாக சாடுவதும் அரசியல் மாற்றங்களை சார்ந்து உள்ளன. ஆனால், இலக்கியம் என்று வரும் போது கலைஞரிடம் அவர்களுக்கு மகத்தான் மரியாதை உண்டு.

இப்போது தீக்கதிர் பத்திரிகையில் கலைஞரின் அரசியல் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், முதல்வரின் மிகச்சிறந்த புதினங்களில் ஒன்றான தென்பாண்டிச் சிங்கம் - கேரளத்தில் உள்ள கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை வகுப்பிற்கு பாடநூலாக வைக்கப்பட்டிருக்கிற தகவலை நான் குறிப்பிட்டதும் மறுநாள் அதை மிகப்பெரியச் செய்தியாக தீக்கதிர் வெளியிட்டது. இதற்காக தீக்கதிர் பொறுப்பாசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்த போது ‘என்ன தோழரே! கலைஞர் மாபெரும் இலக்கியவாதி என்பதில் நாங்கள் எப்போதுமே அணி பிரிந்தததில்லை. அற்புதமான இலக்கியவாதி ஆயிற்றே. அரசியல் வேறு இலக்கியம் வேறு என்று விளக்கினார்.