பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

என் பார்வையில் கலைஞர்


தேரான் - தெளியான்
தீரா
இடும்பன்


இதற்கிடையே, கலைஞருக்கு, என் மீது மனகசப்பை ஏற்படுத்தக் கூடிய மூன்று நிகழ்ச்சிகள் சொல்லிவைத்தது போல் அடுத்தடுத்து ஏற்பட்டன.

தமிழ்க்கல்வி, தமிழ் வழிபாடு போன்ற விவகாரங்களை முன்னிலைப் படுத்துவதற்காக, தோழர் வா.மு.சேதுராமன் அவர்கள், மயிலை கபாலீஸ்வரன் கோயிலுக்கு அருகே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில், புதிய தமிழகத்தின் தலைவர் தோழர் கிருஷ்ணசாமியும் கலந்து கொண்டார். நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு தமிழில் குடமுழக்கு செய்தவரும், இந்த கோயில்களில் தமிழ் வேள்விகளை நடத்துபவருமான சத்தியவேல் முருகன் உள்ளிட்டப் பலசமய பெரியார்களும், சமூகத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். ஒருநாள் முழுவதும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நானும் கலந்துக் கொண்டு உரையாற்றினேன்.

கோயில் கருவறையில் அர்ச்சகர் உள்ளே நிற்பதையும், ஓதுவார் இடஒதுக்கீடாக கருவறைக்கு வெளியே நிற்பதையும் எடுத்துக் காட்டினேன். ஆகையால், வெளியே நிற்கும் ஓதுவார்களை கருவறைகளுக்குள் நிற்க வைக்க வேண்டும். இதற்காக கருவறை நிரப்புப் போராட்டம் ஒன்றை சிறை நிரப்புப் போராட்டம் போல் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டேன். அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என்று வலியுறுத்தும் கி.வீரமணி அவர்கள் அரசு கோயில்களில் தமிழ் வேள்விகளை நடத்துவது பொதுப்பணத்தை வீணடிப்பதாகும் என்று எவரையோ திருப்தி படுத்துவதற்காக விடுத்த அறிக்கையையும் குறிப்பிட்டேன்.