பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

என் பார்வையில் கலைஞர்



ஒரு வருடத்திற்குப் பிறகு, தோழர் ஆலடி அருணாவின் மகனின் திருமண நிகழ்ச்சி அடையாரில் நடைபெற்றது. கலைஞர் இதை நடத்தி வைத்தார். கூட்டம் கலைந்தபிறகு காரைத் தேடிக் கொண்டிருந்த ராசாத்தி அம்மாவிடம் மீண்டும் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் கண்டுக்க வில்லை. குறைந்தபட்சம் அப்படி எனக்குத் தோன்றியது. இனிமேல் அவரை எங்கே சந்தித்தாலும் நானும் கண்டுக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அருணாவிடம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நான் மனத்தாங்கலாக குறிப்பிட்ட போது ‘யோவ்.. அந்த அம்மா ரொம்ப கஷ்டப்பட்டவங்க... அப்பாவி... நிறைய பேரு கூழை கும்பிடு போட்டே அவங்கள ஏமாத்தி இருக்காங்க. இதனால அவங்க எச்சரிக்கையா இருக்காங்க. உம்ம கும்பிடு கூழைக் கும்பிடா அல்லது நல்ல கும்பிடா என்பது அவங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று அவர் ஒரு எதிர் கேள்வி கேட்டார்.

என்றாலும், இனிமேல் ராசாத்தி அம்மாவை எங்கே பார்த்தாலும், அவரைத் தெரிந்தது போல் காட்டிக் கொள்வதில்லை என்று நான் தீர்மானித்து விட்டேன். ஆகையால் அந்த விழா மேடையில், அவரோடு நான் பேசவில்லை. அவரும் என்னை கண்டுக்கவில்லை. இதனை கலைஞர் எப்படியோ கவனித்து இருக்கிறார். உடனே வலது பக்கமாக திரும்பி ராசாத்தி அம்மையாரை நோக்கி ‘அவரு சமுத்திரம்’ என்று சிறிது வலுவாக பேசினார். உடனே, நாங்கள் இருவரும் தெரியுமே என்று ஒரே சமயத்தில் சொல்லிக் கொண்டு, ஒரே சமயத்தில் வணக்கம் போட்டு பிறகு பேசிக் கொண்டோம்.

ராசாத்தி அம்மையார் எவ்வளவு எளிமையானவர் என்பது அப்போது நன்றாகவே புரிந்தது. நானும் கனிமொழி மணமுடித்து சிங்கப்பூர் சென்றதை கருத்தில் கொண்டு, ராசாத்தி அம்மையார் ஆனந்த விகடனில் என் சிரிப்பு சிங்கப்பூர் போய்விட்டது’ என்று குறிப்பிட்டதைப் படித்து விட்டு ‘என் கண்கள் கலங்கின என்று அவரிடம் தெரிவித்தேன். உடனே அவர், ஆனந்த விகடன் அல்ல அவள் விகடன் என்று திருத்தம் கொடுத்தார். அவருடைய கண்கள் உள்முகமாய் போயிருக்க வேண்டும். மனோ அலைகள் சிங்கப்பூருக்கு அவரை இழுத்துக் கொண்டு சென்றிருக்க வேண்டும். சிறிது நேரம் பேச்சற்று காட்சியளித்தார்.

இதற்குப் பிறகு தினகரன் பத்திரிகை விழாவில் ராசாத்தி அம்மையாரை சந்தித்தேன். என் மகனின் திருமண வரவேற்பு