பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

31



நான் வீட்டுக்குப் போகாமல் பாலாஜி நகரில் உள்ள நண்பர் அருண் வீரப்பன் அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். திரைப்பட உலகில் வரலாறு படைத்த ஏவி.மெய்யப்பச் செட்டியார் அவர்களின் மருமகன், இவர் மாமனாரை கேடயமாக்காமல் சுயமாக உழைத்து ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒலிபதிப்பு நிலையத்தை அமைத்திருப்பவர். இவரிடம், கலைஞரை சந்தித்த விவரங்களை தெரிவித்துவிட்டு, விழாவிற்கான செலவுப் பட்டியலைப் போட்டுப் பார்த்தோம். அம்பதாயிரம் ரூபாய் அளவிற்கு வந்தது. நான் அதிர்ந்து போனேன். என்னுடைய ரேஞ்சே ஐயாயிரம் ரூபாய் தான். என்ன செய்வது என்று குழம்பிப் போனபோது, அருண் வீரப்பன் அவர்கள், தனது துணைவியார் மீனாவை அழைத்தார். அவரது துணைவியாரே சிக்கலுக்கு ஒரு தீர்வைச் சொன்னார். அவர், தனது அம்மா ராஜேஸ்வரி அம்மையாரிடம் பேசி அவர் பேரிலுள்ள அந்த மண்டபத்தை எனக்கு இலவசமாக வாங்கிக் கொடுப்பதாக வாக்களித்தார். கலைஞர் என்று சொன்னால் அம்மா கட்டாயம் தருவார் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு குறிப்பிட்ட நாளில் நானும், மீனா அருண் வீரப்பன் அவர்களும், ராஜேஸ்வரி அம்மையார் அவர்களைச் சந்தித்தோம். ராஜேஸ்வரி அம்மையார் எனக்கு ஒளவையார் மாதிரியே தோன்றியது. ஒரே ஒரு வித்தியாசம், தமிழைக் கொடுத்து அன்பளிப்பை வாங்குபவர் அல்ல. அன்பளிப்பு தந்து தமிழை வாங்குகிறவர். அவர் தனது பெயரில் உள்ள அந்த அருமையான கட்டிட வளாகத்தை என் பொறுப்பில் ஒருநாள் இலவசமாய் தருவதற்கு மகிழ்ச்சியோடு உடன்பட்டார். கலைஞர் என்றவுடனே மறுபேச்சில்லை. அவர் எதிர்கட்சியில் இருந்தபோது கூட இதே அணுகுமுறையே கொண்டவர். கலைஞர் வெளியிடும் மூன்று புத்தகத்தின் படிகளையும் ராஜேஸ்வரி அம்மையார் வாங்கிக் கொள்ளவேண்டும் என்று அந்த இடத்தில் கேட்டுக் கொண்டால் அது அசல் கொச்சைத்தனமாக எனக்கு தோன்றியது. அவருக்கு கண்களால் நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினேன். ஒரு வாரம் கழித்துத்தான் அவர் முதல்படிகளை வாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

வீட்டிற்குத் திரும்பியதும், மனம் என்னை உதைத்தது. கலைஞர் எனது சிறுகதை தொகுப்பை படிக்கும்போது அவர் மனம் நோகுமே என்ற பின் யோசனையில் அல்லாடினேன்.