பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IV


எழுத்துக் கணக்கும் இலக்கிய கணக்கும்...

1947ஆம் ஆண்டு, குண்டலகேசி இலக்கியத்தை, ஒரு நாடகமாக உருவாக்கி மந்திரிகுமாரி, என்று பெயரிட்டு, திருச்சி வானொலி நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் கழித்து, திரும்ப, அது என் கைக்கு கிடைத்து விட்டது. அதே வானொலி நிலையம், நடராசன் உருவத்தில் இருபதாண்டுகால இடைவெளிக்குப் பிறகு, என்னிடத்திலே ஒரு சிறுகதையைப் பெற்று, அதை ஒலி பரப்பினார்கள் என்று எண்ணும் போதுதான் எனக்கு வேதனையே. எழுத்தாளர்களை அவர்கள் இருக்கின்ற அந்தஸ்தை வைத்து, அவர்களுக்குள்ள பதவியை வைத்து தயவு செய்து யாரும் கணக்கிடாதீர்கள். (பலத்த கைதட்டல்) எழுத்தை வைத்து கணக்கிடுங்கள் என்பதுதான் எனக்குள்ள கவலையும், அந்த கவலை சார்ந்த வேண்டுகோளும் ஆகும்.

நான் முதலமைச்சராக 89-90ல் பொறுப்பேற்றிருந்த போது, தஞ்சை பல்கலைக்கழகத்தின் சார்பாக ராஜராஜன் விருது வழங்கப்பட்டது. அந்து விருது, நான் எதிர்க்கட்சித் தலைவனாக இருந்தபோதே எனக்காக சிலரால் சிபாரிசு செய்யப்பட்டு, அப்பொழுது வழங்கப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டு, வேண்டாம் என்று தடுக்கப்பட்டு நின்று போன விருது. எனவே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், அந்த வரலாற்றைச் சொல்லி, ‘இதை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டபோது மறுத்தேன். இருந்தாலும் பிடிவாதத்தின் காரணமாக, பிறகு, நான் ஏற்றுக் கொண்டேன். அப்பொழுது குடியரசுத் துணைத்தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா அந்த விழாவிற்கு வந்து, அந்த விருதை வழங்கினார். அத்துடன் பல்கலைக்கழகம் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

அந்த நிதியை, நான் பெற்றுக் கொள்ளாமலேயே பல்கலைக் கழகத்திற்கே சேர்த்து என்னுடைய தாய் தந்தையரின் பெயரால், ஒரு அறக்கட்டளையை நிறுவி தமிழ்ச் சான்றோர்களுடைய பெயரால் ஆண்டுதோறும் சொற்பொழிவுகளை பல்கலைக்கழகத்தில் நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றையெல்லாம் சொல்வதற்கு காரணம் நீங்கள் என்னை தயவுசெய்து பதவியில் இருக்கிறேன்: முதலமைச்சராக இருக்கிறேன் என்று எண்ணிப் பார்த்து என்னுடைய எழுத்துக்களை பாராட்டாதீர்கள்.