சு. சமுத்திரம்
73
ஆதரவு ஜானகி அம்மாவுக்கு இருந்தது என்பதை விட ஆர்எம் வீக்கே இருந்தது. ஆனாலும், தொண்டர் பலம் ஜெயலலிதாவின் பக்கம்.
சட்டப் பேரவையில் இந்த இரண்டு அணிகளுக்கும் பலப்பரீட்சை நடந்த போது ஜானகி அணியின் சார்பாக நின்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், ராஜீவ் காந்தி மனதை மாற்றி ஜானகி அணிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து சட்டசபை ரத்தச் சபையானது வரலாறு. ஜானகி அணியின் சார்பிலான பேரவைத் தலைவர் பி.எச். பாண்டியன், ஜெயலலிதா அணி உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் பதவி நீக்கம் செய்து கொண்டே இருந்தார்.
இந்த அணியின் சார்பில் ஒரு குழுவினர் கலைஞரை அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு கேட்க, அவரோ மறுத்து விட்டார். இதனால் ஜானகி அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டது. கலைஞர் ஜானகி அணிக்கு ஆதரவு கொடுக்க மறுத்ததன் மூலம் ஒரு மாபெரும் அரசியல் தவறை செய்து விட்டார் என்றே நினைக்கிறேன். ஜெயலலிதாவை அரசியல் ரீதியில் வளர்த்து விட்டால் பின்னர் அவரை அந்த களத்திலிருந்து நீக்குவது என்பது கடினம். இதை காங்கிரஸ் உறுப்பினர்களும் புரிந்து கொள்ளவில்லை. இதன் அரசியல் சமூக விளைவுகளை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போராளியாக நான் பெரிதும் மதித்த ஆர்எம்வி அவர்கள் கூட ஜெயலலிதாவுடன் அடிமை பூண்டதில் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
1967ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் சுயத்தை இழந்த காங்கிரஸ் நண்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. சினிமாத்தனங்கள் மலிந்த தமிழக அரசியலில் முன்னாள் கதாநாயகியான செல்வி. ஜெயலலிதா, அங்கிருக்கும் சினிமா செட்டப்பையும், அரசியலுக்குக் கொண்டுவந்து நிரந்தரமாக நின்று தங்களை வேலைக்காரர்களை விட கேவலமாக நடத்துவார், என்பதை அனுமானிக்க முடியாமல் போனார்கள். ஜானகியை முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது போயிருந்தால் குறைந்தபட்சம் ஆர்எம்வி. முதல்வராக வேண்டும் என்று இவர்கள் வற்புறுத்தி இருக்கலாம். என்றாலும், இந்த சாணக்கிய காங்கிரஸ் அடி சறுக்கி இன்னும் அப்படியே விழுந்து கிடக்கிறது.