4
முடியரசன்
பூத்தாற்போல ஆங்கொருவர் ஈங்கொருவர், தமிழில் அறிவியல் வளங்காட்டுவார் உளரேயெனில், விதிவிலக்காக அவர் காணப்படுதலன்றி மற்றொன்றில்லை.
அரியணையில் அமர்ந்திருப்போர் தமிழ், தமிழ் என்று வாய்ப்பறை சாற்றினும் கல்வித் துறையிலிருந்து வெளிப்படும் ஆணைகள், அறிக்கைகள் எம்மொழியில் வருகின்றன? தமிழிலா வருகின்றன? அவ்வாணைகள், மாவட்டக் கல்வி அலுவலர்க்கே தெளிவாக விளங்காமல் தடுமாறச் செய்வதும் உண்டு. ஒரு மாவட்ட அலுவலர் ஒருவகையாகப் பொருள் கொள்ளுவார். அடுத்த மாவட்டத்தவர் வேறுவகையிற் பொருள் சொல்வார்; இறுதியில் தணிக்கைக்கு வருவோர், ‘இரண்டுந் தவறு’ என்று மற்றொரு புதுப் பொருள் தருவார். மொழி வளர்க்கும் பண்ணையாகிய கல்வித்துறையே சீர்குலைந்திருக்கும்போது தமிழ் எவ்வாறு வளரும்?
அரசியல் துறையில்
புதிய கல்விக் கொள்கையிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. உண்மை நிலையை ஆய்ந்து, நடுவு நிலைமையுடன் கல்விக் கொள்கையை வகுத்து, அவ்வவர் தாய்மொழிக்கு ஆக்கந்தந்து, சிந்தனையில் ஒற்றுமையுணர்வு காணவிழையாது, ஒரு மொழியால் ஒருமைப்பாட்டை வளர்த்துவிடலாம் என எண்ணுகின்றனர். இவ்வெண்ணம் பன்மைப் பாட்டை வளர்க்குமே தவிர, ஒற்றுமையுணர்வை வளர்க்காது. இக் கொள்கையில் அரசியல் நோக்கம் பொதிந்துளதே அன்றி அறிவு நோக்கம் காணப்படவில்லை. பல மொழிகள் வழங்கி வரும் ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மொழி கோலோச்ச விரும்பினால் சிறிதளவேனும் காணப்படும் ஒற்றுமையும் கருகிவிடும் என்பதை உணராத அரசியலாலும் தமிழ் இரண்டாம் நிலை மூன்றாம் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
மதத் துறையில்
தமிழ்நாட்டு மக்கள், வந்து புகுந்த இந்து மதம், இசுலாம் மதம், கிறித்துவ மதம் என்று பல்வேறு மதங்களைத் தழுவி வருகின்றனர். தாம் தாம் விரும்பிய மதங்களை ஏற்றுக்கொண்டு, ஒழுகி வருவது அவ்வவர்க்கமைந்த உரிமை. தமக்குச் சிறந்ததாகத் தோன்றிய ஒன்றை வழிபாட்டுக்காக ஏற்றுக் கொண்டதுடன் அமையாது, அவ்வந்நாட்டுக்குரிய மொழிகளுக்கும் அடிமைப்பட்டு விட்டனர். தமிழர் என்ற உணர்வை அடியோடு மறந்துவிட்டனர் - விட்டனர்.
இந்து மதம் புகுந்தோர் ஸ்ரீநிவாஸன், ஜகந்நாதன், விருத்த கிரீஸ்வரன், பங்கஜாக்ஷி, பிரேமலதா, புஷ்பலதா என்ற பெயர்களைச் சூட்டிக்கொண்டு, வடமொழிக்கு வால்பிடித்தனர். இசுலாம் மதத்தைச் சார்ந்தோர் ஹாஜா ஹமீது, இஸ்மாயில், ரஹீம், ஜமீலா, ரசீதா என்று அரபுமொழிக்கு மண்டியிட்டனர். கிறித்துவத்தை நம்பியோர் டேனியல், விக்டர், ஜார்ஜ், அனவுன்சியா, டெய்சி