பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

முடியரசன்


வானொலியில்

தமிழ்நாட்டு வானொலியில், ‘தமிழிசை’க்காகப் பதினைந்து மணித்துளிகள் ஒதுக்கித் தந்து, பெரும்புகழைத் தட்டிக்கொண்டனர்! அதுவும் வாரத்துக்கு இரண்டு நாள் ஒதுக்கித் தந்துள்ளனர் என்றால் அவர்தம் பெருமனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! இவ்வாறு தமிழ்நாட்டிலே தமிழிசையை ஒதுக்கிவைத்துப் பெருமை தேடிக்கொண்டுள்ளனர். ஆங்கில நாட்டிலே தமிழிசைக்காக இப்படி நேரம் ஒதுக்கலாம்; பிரெஞ்சு நாட்டிலே ஒதுக்கலாம்; ஏனைய நாடுகளில் தமிழிசைக்காகச் சிறிது நேரம் ஒதுக்கலாம். தமிழ்நாட்டிலே தமிழிசைக்குக் கால் மணி நேரம் என்றால் இதைவிட இழிவு வேறு வேண்டுமா? தமிழிசைக்குக் கால்மணி நேரந்தான் என்றால் எஞ்சிய நேரமெல்லாம் எந்த இசைக்கு? வேறு எந்த நாட்டிலேனும் அந்த நாட்டுத் தாய் மொழியிசைக்கு ஒரு சிறு நேரம் ஒதுக்குவார்களா? ஒதுக்கியிருப்பின் அஃது அறிவுடைய நாடா? உரிமையுள்ள நாடா? அடிமை நாடாகத்தான் இருக்க முடியும்.

தாளிகைகளில்

நாளிதழ், கிழமையிதழ், மாத இதழ் என்று பல்வேறு இதழ்கள் தமிழில் வெளிவருகின்றன. அவற்றில் அறியாமல் நிகழும் பிழைகள், அறிந்து செய்யும் பிழைகள் அளவு கடந்தன. சந்திப் பிழைகள் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்ட நாளிதழ்களும் உண்டு. வேண்டுமென்றே அயன்மொழிச் சொற்களைப் பயன்படுத்தி, மக்களுணர்ச்சியை அழிக்கும் இதழ்களும் உண்டு. தட்டிக் கேட்கவோ தடுத்துரைக்கவோ எவரும் இலர் என்ற தருக்கால், ஆங்கிலத் தொடர்களையே பயன்படுத்தித் தமிழ்க் கட்டுரைகள் கதைகள் எழுதும் எழுத்தாளரும் உண்டு. எழுத்தோவியங்களுக்குத் தலைப்புங்கூட ஆங்கிலமாக வருவதும் உண்டு. பாவாணர் தமிழிலா எழுதச் சொல்லுகிறோம். எளிய இனிய தமிழில் எழுதினாற் போதும். புனல் என்று எழுத வேண்டா; தண்ணீர் என்று எழுதினால் எவனுக்கு விளங்காது? இதை விடுத்து ‘ஜலமும், வாட்டரும்’ எதற்கு? இத் துறையில் தமிழ்க் கொலை வெளிப்படையாக நடைபெற்றுவருகிறது.

வழிபாட்டுக்குத் தமிழ் வேண்டுமென்றால் முறை மன்றமே தடை விதிக்கிறது. இசையரங்கில் தமிழ் வேண்டுமென்றால் ஒரு கூட்டமே கொந்தளித்தெழுகிறது. போராட்டங்கள் பல நடத்தியும், தலைவர்கள் தட்டித் தட்டி யெழுப்பியும், சான்றோர்கள் அறிவுரை நல்கியும், வெளிநாட்டார் இகழ்ந்து பேசியும் அறிவோ மானமோ ஏன் தோன்றவில்லை? தமிழுணர்ச்சி மங்குதற்குக் காரணந்தான் என்ன?

தமிழகத்தில், மலையாள மொழிக்கு உரிமை பூண்டோர் வாழ்கின்றனர். கன்னட மொழியைத் தாய் மொழியாகக் கொண்டோர் வாழ்கின்றனர். தெலுங்கு பேசுவோர் வாழ்கின்றனர். அரபு மொழிக்கு உரிமை கொண்டாடுவோர் ஈங்குளர்.