பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

முடியரசன்


ஒற்றுமை என்றால் என்ன

இனி ஒற்றுமை என்ற சொல்லை - அதன் விளக்கத்தைக் காண்போம். ஒரு பள்ளியில் ஆசிரியர் பலர் இருக்கின்றனர். குறித்த நேரத்தில் உள்ளே நுழைகின்றனர். ஒருவர் கணக்குப் பாடம் கற்பிக்கின்றார். ஒருவர் தமிழ் கற்பிக்கின்றார். ஒருவர் ஆங்கிலம்; ஒருவர் அறிவியல் என்று தனித்தனியே பாடங்கள் கற்பிக்கின்றனர். பின்னர் உரிய நேரத்தில் வெளிப்போந்து தனித்தனியே அவரவர் தம் இல்லத்து வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பள்ளியின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஒரு நேரத்தில் ஓரிடத்திற் கூடி ஒன்றுபட்டு நின்று பணி செய்து பின்னர்ப் பிரிந்து தத்தமது கடமையாற்றுகின்ற நிலைமை ஒற்றுமை யாகும். அஃதாவது கூட வேண்டிய நேரத்திற் கூடி அவரவர் பாடங்களைக் கற்பித்துப் பிரிய வேண்டிய நேரத்தில் பிரிந்து வாழ்வது ஒற்றுமை. இதனை ‘ஒருமை’ என்று கூறுதல் பொருந்தாது. ஒருமை எனக் கூறினால் அவரவர் பாடங்களைக் கற்பிக்காது ஒரே பாடத்தைக் கற்பித்தல் வேண்டும். கூடுதலும் பிரிதலும் இன்றிப் பள்ளிக்குள்ளேயே உறைதல் வேண்டும். இதுதான் ஒருமை.

இலக்கண விளக்கம்

மற்றொரு வகையால் இச்சொற்களுக்கு விளக்கம் காண்போம். இலக்கணத்தில் ‘இரட்டைக் கிளவி’, ‘அடுக்குத் தொடர்’ என இரு சொற்கள் உண்டு. நீர் சலசல என ஓடுகிறது என்னும் தொடரில் சலசல என்பது இரட்டைக் கிளவி ஆகும். கிளவி என்றால் சொல் என்று பொருள். சொல் இரட்டையாக வரின் அஃது இரட்டைக் கிளவி எனப்படும். ‘சலசல’ எனச் சேர்ந்திருக்கும் பொழுது அஃது ஒலிக்குறிப்புப் பொருளை உணர்த்தும். ‘சல’ எனப் பிரித்தால் தனக்குரிய பொருள் தாராது. தனித்து நின்று பொருள் தாராது. ஒரு சொற்போலச் சேர்ந்து நின்றால் மட்டுமே பொருள் தருவது ‘இரட்டைக் கிளவி’ எனப்படும். இதுபோன்றதுதான் ஒருமைப்பாடும். அஃதாவது தனித்து நில்லாது, தனக்குரிய தன்மையிழந்து மற்றொன்றுடன் இரண்டறக் கலந்து ஒன்று போல நின்று செயற்படுவது ஒருமை.

அடுக்குத் தொடர் என்பது இரட்டைக் கிளவி போலவே இரு சொற்கள் கூடி நிற்கும். ஆனால், பிரிந்து நிற்பினும் தனக்குரிய பொருளைத் தரும். பலபல ஊரார் பாராட்டினர் என்ற தொடரில் ‘பலபல’ என்பது அடுக்குத்தொடர். இது ‘பல’ எனப் பிரித்து நிற்பினும் தனக்குரிய பொருளைத் தரும். இதனை ‘இரட்டைக் கிளவி’ எனல் பொருந்தாது. இவ்வாறு ஒன்றுடன் ஒன்று கூடி நின்றும் தனித்து நின்றும் தனக்குரிய தன்மையுடன் இயங்குவது ஒற்றுமையாகும்.

பாலும் சர்க்கரையும்

பாலுடன் சர்க்கரை கலக்கப்படுகிறது. சர்க்கரை கரைந்துவிடுகிறது. தன் உருவத்தையும் இழந்துவிடுகிறது; பால் மட்டும் கண்ணுக்குப் புலனாகிறது;