பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை பிறந்த கதை

23


அத்தரைத் தடவிவிட்டு, ஒரு போத்தலைத் தாளில் சுருட்டிக் கொடுத்து என் தலையிற் கட்டிவிட்டுப் போனார். தேர்வுத் தாள் திருத்தும் பொழுது, இஃது எனக்கு ஓர் இடையூறாகவும் எரிச்சலாகவும் இருந்தது. திருத்தும் பணி ஓடவில்லை. எரிச்சல் பாடலாக ஓடி வந்தது. உடனே பாடலை எழுதி விட்டுத் திருத்தும் பணியில் ஈடுபட்டேன்.

எடுப்பு

அத்தர் விற்று வருவோனின் தொல்லை - அப்பப்பா

அவன் கையில் அகப்படுவார் தப்பிடுவதில்லை.

முடிப்பு

பூசுவது நம்முடலில் ஒன்று-சின்ன
போத்தலில் அடைத்துக் கொடுப்பது மற்றொன்று
காசுவரும் படிஒன்றே நோக்கம் - குழைந்து

கனியமிகப் பேசிடுவான் கண்டபலன் ஏக்கம்.

இந்த அத்தர்ப்பாட்டும் ‘காவியப் பாவை’க்குரியதே.

கனவிலே பிறந்த கவிதைகளும் உண்டு. அவற்றுள் ஒன்று காண்போம். ‘அனிச்ச அடி’ ஓர் அருமையான நாடகக் காப்பியம். இதன் ஆசிரியர் பாவலர்மணி பழநி, காப்பியத்தை எழுதி முடித்தபின் என்னை உள்ளிட்ட நண்பர் சிலர் முன்னிலையில் மாலை தோறும் படித்துக் காட்டுவார். நாங்கள் ஐய வினாக்கள் தொடுப்போம். அவர் தெளிவுபடுத்தி ஐயம் அகற்றுவார். சிலவேளை மறுப்புகள் உரைப்போம். மறுப்புக்கேற்ற மறுமொழி உரைத்து அமைதி தருவார். மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படின் மாற்றமும் செய்து கொள்வார். பண்டை நாள் அரங்கேற்றம் போல் அந் நிகழ்ச்சி இருந்தது. இற்றைநாள் கவிதை என்ற பெயரால் வெளிவரும் சிறுவரிகளைக் கண்டு மனம் நொந்து போயிருந்த எனக்கு இக் காப்பியப் படிப்பு, பேருவகை தந்தது. இவ்வுவகைப் பெருக்கில் ஊறித் திளைத்துக்கொண்டிருந்த நான் ஒருநாள் இரவு வழக்கம்போல் தாளும் தூவலும் தலைமாட்டில் வைத்துக்கொண்டு உறங்கினேன். பாவலர்மணி காப்பியத்தைப் படிக்கிறார். அதனைக் கேட்டுப் பெருங்களிப்புற்ற நான் அவரைப் பாராட்டிப் புகழ்ந்து பாடுகிறேன். அப் பாடல் கனவாகவே முடிந்து விடக்கூடாதே எனக் கருதி எப்படியோ முயன்று விழித்துக்கொண்டு அப் பாடலை எழுதி வைத்தேன். அக்கனவுப் பாடல்களை உங்கள் நினைவுக்குத் தருகிறேன்.

பாட்டென்ற பேரால் பழுதுபட்ட சொற்றொடரைக்
கேட்டென்றன் நெஞ்சங் கிறுகிறுத்தேன்-வேட்டெழுந்து
நாடகமாம் நன்மருந்தை நண்பன் பழநியெனும்

பாடவலான் தந்தான் படைத்து.