பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபதாம் நூற்றாண்டில் கவிதை

29


நினைவு கவிஞனுக்கு வேண்டும். அப் பரம்பரையுணர்வைப் பாரதியாரிடம் பரக்கக் காணலாம். பாரதிதாசனிடம் சிறக்கக் காணலாம். பாரதிதாசன் பரம்பரையினரிடம் நிரம்பக் காணலாம்.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

உண்மை வெறும் புகழ்ச்சியில்லை”

என்ற பாடல் வரிகளால் பாரதியார் முன்னைப் புலவர்களிடத்தில் வைத்திருந்த நன்மதிப்பும் பரம்பரையுணர்வும் தெளிவாக்கப்படுகின்றன. பாரதிதாசன், பாரதிக்குத் தாசன் எனப் பெயர் வைத்துக் கொண்டமை ஒன்றே, அவரிடத்து மிளிரும் பரம்பரையுணர்வை எடுத்துக்காட்டும். மேலும்

“திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத்தல்போல்
பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில

கூறுவேன்.......”

என்று பாரதிதாசன் பாடுகின்றார். பெருமிதத்தின் திருவுருவமாக விளங்கிய பாரதிதாசன் பாடும் இவ்வரிகளால் அவர்தம் அடக்கவுணர்வும் பரம்பரையுணர்வும் புலனாகின்றன.

“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா-அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா-அதைக்

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா”

என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடும் முறையால் பாரதிபால் அவர் கொண்டுள்ள ஈடுபாட்டை நம்மால் உணர முடிகிறது. இவ்வாறே பரம்பரையுணர்வு நம் கவிஞர்களிடத்தே சிறந்து விளங்குவதைக் காணல் கூடும். எனினும் பாரதிதாசனுக்குப் பின் தோன்றி வளர்ந்து வரும் கவிஞர் சிலரிடையே அந் நல்லுணர்வு மங்கியிருப்பது வருந்தத்தக்கதேயாகும். “ஒரு மாபெருங் கவிஞன் தனக்கு ஒளி காட்டிய கவிஞனுக்கு அஞ்சலி செலுத்துவதை உலக இலக்கியங்கள் அனைத்திலும் காண்கிறோம்” என்று கற்றவர் கூறுவர்.

கவிதையும் இலக்கணமும்

பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் பாடல்களில் இலக்கணம் மதித்துப் போற்றப்பட்டாலும் வளர்ந்து வரும் கவிஞர்கள், வளர்ந்து விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் எழுதிய பாடல்களில் இலக்கணம் எள்ளி நகையாடப்படுகிறது. இலக்கணம் வேண்டுவதில்லை என்றே வாதிடவும்படுகிறது. கல்லார் பலராகிக் கவிதையுலகில் உலா வருவதால் நேர்ந்த விளைவே