பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசன்

41


இலக்கிய உலகின் மறுமலர்ச்சிக்கு இராமலிங்கர், தாயுமானவர், சிவப்பிரகாசர் போன்றவர்களை வழிகாட்டிகளாகக் கொள்ளலாம். இவர்கள் சமய நோக்குடையராயினும் சிற்சில துறைகளில் கருத்துப் புரட்சியைக் காட்டியவர்கள். சொல்ல வேண்டிய கருத்தைச் செய்யுளில் அமைத்துக் காட்டும் வகையில் புதிய பாங்கைப் புகுத்தியவர்கள். யாப்பு வகைகளிலே எளிய இனிய அமைப்பு முறைகளைச் சிறந்த முறையில் கையாண்டு மறுமலர்ச்சியைத் தொட்டுக் காட்டியவர்கள். ஆதலின், அவர்களை வழிகாட்டிகள் எனத் துணிந்து கூறலாம். இவர்கள் காட்டிய வழியிலே நடந்துவந்து இன்னும் சில படிகளில் முன்னேறி நாடு, மொழி, குமுகாயம் என்றின்னோரன்ன பொருள்களைக் கருவாகக் கொண்டு இனிய ஓசை நயமிக்க பாடல்களைப் பாடித்தந்து, விடுதலை வேட்கையை உண்டாக்கினார் பாரதியார். இவரை மறுமலர்ச்சி இலக்கிய உலகின் விடிவெள்ளி என்றே கொள்ளுதல் பொருந்தும்.

பாரதியை வித்து என்று சொன்னால் அவ் வித்தினின்றும் முளைத் தெழுந்து, அனிதேர்ப் புரவியொடு ஆட்பெரும் படைக்கும் நிழல் நல்கும் ஆலமரம் என்று பாரதிதாசனைச் சொல்லலாம். சுருங்கக் கூறின் பாரதிதாசனை மறுமலர்ச்சி இலக்கிய உலகிலே பேருருக்கொண்டு விளங்கி நிற்கும் ஒளிப்பிழம்பு என்றே கூறுதல் வேண்டும்.

கவிஞன் என்றாலே அவனுக்குத் துணிவு மனப்பான்மை வேண்டும். உண்மையைச் சொல்வதும் நன்மையைச் சொல்வதும் அவன் கடமை. அக் கடமை உணர்ச்சியில் அச்சம் தலைகாட்டவேசுட்டாது. அதிலும் மறுமலர்ச்சிக் கவிஞன் என்றால் எதற்கும் எவர்க்கும் அஞ்சாத நெஞ்சுரம் வேண்டும். ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்பது பாரதியாரின் மனத் துணிவு. பாவேந்தர்க்கு அந்த நெஞ்சுரம் - அந்த மனத்துணிவு இயல்பாகவே வாய்த்திருந்தது. அவருடைய செம்மாந்த தோற்றமே அதற்குச் சான்று. எத்தகைய கருத்தையும் எடுத்துரைப்பதற்கு எந்தச் சூழ்நிலையிலும் எவரிடத்திலும் தயங்கினாரல்லர். எவர் தூற்றினும் போற்றினும் அவர் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால், அந்த அஞ்சாமையில் தன்னலம் இராது; பொது நலமே மிளிரும். தீமை இராது; நன்மையே பொலியும். ‘நான் செய்ய வேண்டியது என்ன? என்பதுதான் என்னுடைய சிந்தனையே தவிர, பிறர் என்ன எண்ணுவார்கள் என்பதன்று என்பது பாவேந்தருடைய உட்கிடக்கையாகும். குமுகாயத்தைப் பாழ்படுத்தும் மூடப்பழக்கவழக்கங்களைச் சாடுகின்ற பொழுதும் அரசியலில் பிற துறைகளில் மாறுபட்ட பிற்போக்குக் கொள்கைகளை மறுத்துரைக்கும் பொழுதும் மொழிப் பகையைப் பழித்துரைக்கும் பொழுதும் போர்க்களத்தில் இமையாது நிற்கும் போர் மறவனுடைய உள்ளத்துடன் விளங்குவார். அவர் தம் பாடல் ஒவ்வொன்றும் பாடலில் வரும் சொல் ஒவ்வொன்றும் வில்லிலிருந்து வெளிக் கிளம்பும் கூரிய அம்பாகவே காணப்படும். கடும்