பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10

வேர்ப் பலா

காலம் மாறும்பொழுது அம் மாற்றத்துக்கேற்பக் கருத்துகளும், . கோட்பாடுகளும், பழக்க வழக்கங்களும் மாறி வருவது இயல்பு. அன்று முடியாட்சி கோலோச்சியது, காலம் மாறியது; இன்று, குடியாட்சிக் கொள்கை ஆட்சி செய்கிறது.

ஆடவர் குடுமி வைத்திருந்த காலம் அன்று; முடியைக் கோலங்கள் பல செய்து அழகு காணும் காலம் இன்று. தாழ்குழலார் எனத் தையலார் பாடப்பட்ட காலம் அன்று கூந்தலைத் தறித்து விட்டுத் தடவித் தடவிப் பார்க்கும் காலம் இன்று.

மாணவர் மரத்தடியில் பாடங்கற்ற காலம் அன்று; கற்பதற்கு அவர்கள் மாளிகையில் புகுந்து வருங்காலம் இன்று.

வீரத்தின் அறிகுறியாகப் புலிப் பற்றாலி கட்டி மணந்தான் அன்று. கடைத்தாலி வாங்கிக் கட்டுகிறான் இன்று. அதுவுமின்றி மணங்கள் நடைபெறு வதும் உண்டு. உடை மாறியது; உணவு முறை மாறியது; உறையுள் அமைப்பு மாறியது; பழக்க வழக்கங்கள் மாறின.

இவ்வாறு, பல மாற்றத்துக்கேற்பத் தன் பழக்க வழக்கங்களை, கொள்கை களை, எண்ணங்களை, கோலங்களை மாற்றிக்கொண்டவன்தான் மனிதன்.

ஆனால், மகளிர் முன்னேற்றத்தைப் பொறுத்தவரையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் மட்டும் தயங்குகின்றான். தயங்கினாலும் அவனுடைய விருப்பத்தையோ ஒப்புதலையோ எதிர்பார்த்துக் கொண்டிராமல், காலம் தன் பணியைச் செய்துகொண்டுதான் இருக்கிறது.

இடைக்காலத்தில், பெண்களை அடிமையாக, அழகுப் பாவையாக, இன்பப் பொருளாக, அறியாமையின் கொள்கலமாகக் கருதி இயங்கி வந்தது குமுகாயம், அதற்குச் சமயம், சாத்திரம், அறியாமை முதலியன நல்ல அரண்களாக அமைந்தன. எனினும் அவ்வரண்களை உடைத்துக்கொண்டு அடிமைத் தளைகளை அறுத்தெறிதல் வேண்டுமென்ற எண்ணம் அங்கங்கே அரிதினும் அரிதாக முகிழ்த்துக்கொண்டுதான் இருந்தது.