பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

முடியரசன்


வேறொன்றறியாச் சான்றாண்மை மிக்க சமுதாயமாக விளங்கியதை அறிந்து கொள்கிறோம்.

பிசிராந்தையார் கூறுங் காரணங்களுள் மற்றொன்றும் குறிப்பிடத் தகுந்தது. “வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்” என்பது அது. வேந்தன் அல்லவை செய்யமாட்டானாம். நல்லவை செய்து காப்பானாம். இதனால் பண்டைய அரசியல் நாகரிகத்தையும் அறிய முடிகிறது.

பண்டைய நாளில் நம் சமுதாயம் நாகரிகத்தின் உச்சியில் மின்னிப் பொலிந்ததை ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்று, கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பாடிய புறநானூற்றுப் பாடலொன்று அழகுற எடுத்துக்காட்டுகிறது. அப் பாடற் கருத்தைக் கொண்டு பண்டைய மன்பதை நாகரிகம் எத்தகையது என்று தெரிந்துகொள்ளலாம்.

“சாவா மருந்தெனப்படும் அமிழ்தமே கிட்டினும் தனித்திருந்து உண்ணார்; யாரோடும்” வெறுப்பில்லாதவர், பிறர் அஞ்சுவதற்கு அஞ்சிச் சோம்பியிரார்; புகழுக்காகத் தம்முயிரையும் ஈவர்; பழியெனின் உலகம் முழுவதும் பெறினும் கொள்ளார்; மனக் கவலையில்லாதவர்; தமக்கென முயலார்; பிறர்க்கென முயலுவர்; இத் தன்மையர் உண்மையால் இவ்வுலகம் இருக்கிறது” என்று கூறுவதால் அம் மன்பதையின் பேருள்ளம் கண்டு வியக்கின்றோம்.

இனி, பண்டை நாளிற் குடும்ப வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதைக் கூறுகிறேன். திருமணமான ஆடவன், தான் உழைத்து அறஞ்செய்து, தானும் உண்பானே அன்றிச் சோம்பியிரார். ஏதேனும் ஒரு தொழில் செய்து இல்லறம் செவ்வனே நடைபெற முயலுவன். தொழிலை உயிராகக் கருதி ஒம்புவன். மனைவி, கணவனே உயிரெனக் கொண்டு, மனைத்தக்க மாண்புடையளாகி, இல்வாழ்க்கை நடத்துவள், இக் கருத்தைத் குறுந்தொகையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ,

“வினையே ஆடவர்க்குமிரே, வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர்உயிர்” (குறுந் 135)

என்ற பாடலால் விளக்கிக் காட்டுகிறார்.

கூடலூர்கிழார் என்ற புலவர் மற்றொரு குடும்பத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார். செல்வ மகளொருத்திக்குத் திருமணம் ஆயிற்று. அவள் கணவனுடைய இல்லம் சென்றாள். அவ்வூர்க்குச் செவிலித்தாய் சென்று, அத் தலைவி குடும்பம் நடத்தும் பாங்கை நேரிற் கண்டு வந்து, அதனை நற்றாய்க்குக் கூறுவதாகப் புலவர் பாடுகிறார். முற்றிய தயிரைப் பிசைந்து கொண்டிருக்கிறாள் அச் செல்வமகள். அப்பொழுது அவள் உடுத்திருந்த தூய ஆடை நழுவுகிறது. தயிர் படிந்த விரல்களைக் கழுவாது, அவ்வாடையைச் சரி செய்துகொண்டு, தன் கண்களில் தாளிதப் புகை பொருந்தத் தானே செய்த இனிய புளிப்பாகரைக்