பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ஒரு பெரும் லட்சியம் இருந்தது ; இந்த நாடு அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டும்; நாம் நமது பிறப்புரிமையான சுதந்திரத்தை பெற்றே தீரவேண்டும் என்று.

1930களில் இந்திய தேசிய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைமையை காந்திஜீ ஏற்றுக் கொண்ட பிறகு, 1933ல் அதை அவர் மக்களின் இயக்கமாக மாற்றிய பின்னர், நாடு நெடுகிலும் புதிய விழிப்பும் புதிய உத்வேகமும் ஏற்பட்டன.

மக்களின் இந்த உணர்வை சரியான பாதையில் - நல்வழியில் - செலுத்துவதற்காகவும், காந்தி ஜீயின் கருத்துக்களையும் கொள்கைகளையும் எடுத்துச் சொல்வதற்காகவும், பத்திரிகைகள் பாடுபட்டன.

வெறும் அரசியல் போராட்டம் மட்டுமே மகாத்மா காந்தியின் நோக்கமாக இருந்ததில்லை. சமூக மேம்பாடும்; அதற்கான சீர்திருத்தங்களும், தனிமனிதப் பண்பாடும் ஆன்மீக உயர்வும் அவரால் வலியுறுத்தப்பட்டன. மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சாதி வேற்றுமைகளை அகற்றுதல், அவசிய உழைப்பு, ஒழுக்க நெறிகள், எளிமையான தூய வாழ்வு முதலியவற்றை காந்திஜி பிரச்சாரம் செய்து வந்தார்.

இவற்றை மக்கள் மத்தியில் -பரப்புவதற்காக நாடு நெடுகிலும் புதிய புதிய பத்திரிகைகள் தோன்றின– நாளேடுகள், வாரப் பத்திரிகைகள், மாதம் இருமுறை வெளியீடுகள் என்று.

தமிழ் நாட்டிலும் இச்செயல் மலர்ச்சி தீவிரமாக இருந்தது.

அதற்கு முன்னரும் தமிழ்ப் பத்திரிகைகள் செயலாற்றிக் கொண்டுதான் இருந்தன.