பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் தேர்ந்து கொண்ட வாழ்க்கை எனக்கு சந்தோஷங்களையே தந்து வருகிறது. எதையும் நாள் அனுபவமாகவே கொள்கிறேன். ஏமாற்றங்களைக் கூட ஏமாற்றங்களாக நான் கருதுவது இல்லை. அவற்றையும் அனுபவங்களாக ஏற்று மகிழ்கிறேன். அவையும் எனக்கு உண்மைகளை உணர்த்தும் செயல்களே ஆகும்.

எனது வாழ்க்கை அனுபவத்தில், நான் கண்டறிந்த உண்மைகளை எல்லாம் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும்; அவை மற்றவர்களுக்கு எவ்வளவோ அறிவிக்கும் என்று பலரும் என்னிடம் கூறுகிறார்கள், நேரிலும், கடிதங்கள் மூலமும்,

அதிலும், 'வல்லிக்கண்ணன் போராட்டங்கள்' என்ற புத்தகம் வெளி வந்த பிறகு, எனது அனுபவங்களையும், அவை உணர்த்திய -- உணர்த்துகிற - எண்ணங்கள், சிந்தனைகளையும் நான் எழுத்தில் பதிவு செய்தாக வேண்டும், அது என் கடமையும் கூட என்று - வலியுறுத்துகிற கடிதங்கள் எனக்கு வந்து கொண்டேயிருக்கின்றன.

என் இனிய நண்பர், சோலை இயக்க கௌரவ இயக்குநர் திரு. ஆர். டி. ராஜன் அவர்கள், பத்திரிகைகள், எழுத்தாளர்கள் பற்றி நான் அறிந்த உண்மைகளை எழுதித்தர வேண்டும் என்று கோரினார்.

அதற்கிணங்க, 'தமிழ்ப் பத்திரிகைகள் - அன்றும் -- இன்றும்' 'எழுத்தாளர்களும் பத்திரிகைகளும்' ஆகிய கட்டுரைகளை எழுதியுள்ளேன்.