பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆய்

பொதியில் மலை தமிழ்நாட்டுக்குச் சிறப்பைத் தருவது. தென்றல் அங்கிருந்து வீசுகிறது. சந்தனம் அதில் விளைகிறது. அதனைச் சார்ந்து திருக்குற்றாலம், பாவநாசம் என்னும் அழகிய இடங்கள் இருக்கின்றன. அங்கே ஆய் குடி என்பது ஓரூர். அதை ஆய்க்குடி என்று இப்போது சொல்கிறார்கள். ஆய் என்ற வள்ளல் வாழ்ந்திருந்த இடம் அது. ஆய் அண்டிரன் என்றும் அவனைப் புலவர் பாடியிருக்கிறார்கள்.

அவனுடைய ஆட்சிக்குட்பட்டது பொதிய மலை. அக் காலத்தில் அம் மலையில் யானைகள் மிகுதியாக இருந்தன. ஆதலின் ஆய் பல யானைகளைப் பிடித்து வந்து பழக்கினான். ஆண் யானைகளைப் போருக்கு ஏற்றபடியும், பெண் யானைகளை வாகனமாகப் பயன் படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் பழக்கச் செய்தான். அவனுடைய ஆனைப் பந்தியில் நூறு யானைகளுக்குக் குறைவாக என்றும் இருந்ததில்லை.

அவனிடம் அடிக்கடி பாணர்களும் புலவர்களும் வருவார்கள். அவர்களுக்கு மற்றவர்கள் கொடுப்பது போலப் பொன்னும் மணியும் கொடுப்பான்; அவற்றோடு யானையையும் பரிசிலாக வழங்குவான். யானைப் பரிசில் தருபவன் என்று அவனைத் தமிழ் மக்கள் குறிப்பிடுவார்கள்.

அக்காலத்தில் உறையூரில் மோசியார் என்ற புலவர் வாழ்ந்து வந்தார். அந்நகரில் ஊரையெல்லாம்