பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

57



22. மலைபோல் குவிந்த மலர்கள்

அருச்சுனன் பெருவீரன். தெய்வபூசை தவறாமல் செய்பவன். பூசை செய்யத் தவறுமாயின், உணவே உண்ண மாட்டான்.

அத்தகைய தெய்வ பக்தனிடமும் ஒரு குறை இருந்தது. உலகத்தில் தன்னைவிடச் சிறந்த பக்தர் இலர் என்று எண்ணும் இறுமாப்பே அது.

அதனால், வீமனைச் சற்று ஏளனமாக நோக்குவான்.

"இவன் தெய்வபூசையே செய்வதில்லை. எந்நேரமும் வண்டிவண்டியாய் உண்டி உண்பதிலேயே ஆர்வம் காட்டுகிறான்" என்பதால், வந்த ஏளனம் அது.

கண்ண பெருமான், அருச்சுனனிடத்துள்ள இந்த அகந்தையை அறிந்தார். "கீதை உபதேசம் நேரில் கேட்டும் அகந்தை போகவில்லையே! அகந்தை இருந்தால், பிற நல்ல குணங்களையெல்லாம் மழுங்கச் செய்து விடுமே! ஆதலால், இவன் அகந்தையைத் துடைக்க வேண்டும்" என்று எண்ணிச் செயல்படக் காலம் எதிர்நோக்கியிருந்தார்.

பாரதப்போரில் அருச்சுனன் மகன் அபிமன்யுவைச் சயததிரதன் என்பவன் கொன்று விட்டான்.

"என் மகனைக் கொன்றவனைக் கொன்றே தீருவேன்" என்று அருச்சுனன் சபதம் செய்தான்.

அந்தச் சபதம் நிறைவேற வேண்டுமாயின், சிவபெருமானிடம் பாசுபதம் என்னும் ஆயுதம் பெறவேண்டும். அதற்காக சிவன் இருக்கும் கயிலை மலைக்கு அருச்சுனனை அழைத்துக் கொண்டு, கண்ணன் புறப்பட்டான்.

பனியால் மூடப்பட்டிருந்த கயிலை மலைப்பகுதியில் புல், பூண்டு கூட முளைப்பதில்லை.