பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

59



"ஆம்! அருச்சுனா வீமன் அருச்சனை செய்வதை யாரும் பார்க்கவில்லை. பார்க்கவும் முடியாது. அவன் உன்னைப் போல், தெய்வ உருவம் நிறுவி, மந்திரங்கள் ஓதி, மலர்கள் தூவி அருச்சனை செய்வதில்லை.

அவன் செய்யும் அருச்சனை மானசீகமானது; மனத்தாலேயே செய்யப்படுவது. அவன் எங்காவது சென்று கொண்டிருக்கும்போது, கண்ணில் பட்ட மலர்களைப் பார்த்து இவை தெய்வ அருச்சனைக்கு உரியவை ஆகட்டும்! என்று மனத்தால் நினைப்பான். உடனே அம்மலர்கள் அனைத்தும் இங்கே வந்து மலைமலையாகக் குவிந்து விடும். நீ நினைப்பது போன்று வீமன் உண்ணும் பிண்டம் அல்ல. சிறந்த தெய்வ பக்தன். அவனோடு ஒப்பிடும்போது, நீ பக்தனே அல்ல என்ற நிலைக்குத் தள்ளப் படுவாய்! ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பக்தனை நீ ஏளனம் செய்வதை நான் அறிவேன். இனியாவது ஏளனம் செய்வதை விட்டுவிடு!

"நீ தான் சிறந்த பக்தன் என்ற அகந்தை உன்னிடம் உள்ளது. தெய்வபக்திக்குப் பெருந்தடையாக இருப்பது அகந்தையே! நாயினும் கடையேன் என்று தன்னை நினைப்பவனே உண்மைப் பக்தன் ஆவான்".

என்று கண்ணன் கூறிய மொழிச்சுடரால் அருச்சுனன் நெஞ்சில் மண்டியிருந்த அகந்தை அரக்கு உருகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.

தன்னைத் திருத்தி ஆட்கொள்வதற்குக் கண்ணன் செய்த உபதேசத்தை எண்ணி, அருச்சுனன் மெய்சிலிர்த்து நின்றான். அன்று முதல் வீமனிடம் மிக்க பணிவுடன் நடந்து கொண்டான் என்பதைச் சொல்ல வேண்டுமோ?