பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

த. கோவேந்தன்



23. தந்தையின் தவம்

பாரதம் ஐம்பத்தாறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றுள் ஒன்று சிந்து.

அந்நாட்டு மன்னனுக்கு ஒரே மகன். பெயர் சயத்திரதன். அவன் வளர வளரத் தீய குணங்களும் அவனிடம் வளர்ந்தன. பிறர்க்குத் துன்பம் இழைப்பதைப் பெருமகிழ்ச்சியாகக் கருதினான். யாராவது அவன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினால், அவர்களைத் தண்டிப்பான்.

சிந்து மன்னன், விருத்தக்ஷத்திரன் தன் மகன் செய்யும் கொடுமைகளை அறிவான். ஆயினும் ஒரே மகன் என்ற பாசத்தால், அவனைக் கண்டிக்கவே மாட்டான்.

திருமணம், செய்து வைத்தால் அவன் கொடுங்குணம் குறையலாம். என்று எண்ணிய தந்தை, அவனுக்குத் துரியோதனன் தங்கை துச்செள்ளையைத் திருமணம் செய்து வைத்தான்.

தந்தையின் எதிர்பார்ப்பு வீணானது. சயத்திரதன் கொடுமை எல்லை கடந்து போயிற்று.

"இத்தகைய கொடியவனுக்குக் கேடு நேருமே! யாரிடமாவது சிக்கித் தலை அறுப்புண்டு சாகவுங்கூடுமே! இனி இவனைத் திருத்தவே இயலாது. இவன்கேடு அடையாமல் காக்கவும் வேண்டும். இதற்கு என்னவழி என்று ஆராய்ந்தான்.

"தவம் செய்து இறைவனிடம் வரம் பெற்று நம் ஒரே மகனைக் காப்போம்" என்று எண்ணினான். காட்டின் நடுவே சியமந்தகம் என்ற ஒரு தடாகம்(குளம்) இருந்தது. அதன் கரையெங்கும் மரங்கள் வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்திருந்தன. வெயில் நுழைபு அறியாத சோலைகளாக அவை இருந்தன.