ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!
15
திகீரென்றது!—ஞாபகமாக வைத்துச் சென்ற ஐம்பது ரூபாய் முழு நோட்டை—கரன்ஸி நோட்டைக் காணோம்!—என்ன சோதனை இது?அன்றைக்குக் கம்பெனிச் செலவுக்காகப் பழைய டயர்களை உரைக்க முள்கட்டை மற்றும் விறகு வகைக்காகச் செலவான ஐம்பது ரூபாய் போக, நூறு ரூபாயில் மிச்சமிருந்த பாக்கி ரூபாய் ஐம்பதையும் சட்டையின் உட்பையிலேதான் வைத்தார். அவர் நினைவு பிசகாதவர்! தேவையான சாமான்களைக் கீழவாசல் கடை வீதியில் வாங்கி வந்து மீதம் ஐம்பது ரூபாயை அவரிடம் இந்த அதிசயம் தானே ஒப்படைத்தான்! மாடி அறையின் கதவை அவரேதான் திறந்தார்! பதற்றத்தோடு பின்புறக் கதவை நோக்கினார். “ஐயையோ!” என்று பதறினார். பின்புறக் கதவை அடைத்துத் தாழிட மறந்துவிட்டார். பாவம்!—பாங்க் நேரம் முடிந்து விடுமே என்ற அவசரத்தில் அங்கிருந்து அறையைச் சரிபார்க்காமல் புறப்பட்டது தவறு என்பதை உணர்ந்தார். உடனே கீழே வந்தார். பெரியவரை விசாரித்தார். மேலே யாருமே போகவில்லை என்று பெரியசாமி சொல்லவே, அவருடைய குழப்பம் அதிகரித்தது; தன் கணக்கில் அந்தப் பணம் ரூபாய் ஐம்பதைப் பற்று எழுதிக் கொள்ள வேண்டியதுதான் என்ற கடமை உணர்வில் மனத்தைத் தேற்றிக் கொண்டவராகச் சாப்பிட்டுவிட்டு எச்சில் இலையைத் தெருக்குப்பைத் தொட்டியில் வீச இறங்கி வந்தார் ராமையா.