பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

27


இப்படி இந்த மூன்று ஆண் சிங்கங்களும் வீர கர்ஜனை புரிந்த வண்ணம் நடந்தார்கள் அரண்மனையை நோக்கி.

வழியில் காவேரி குறுக்கிட்டது.

கரையின் விளிம்பில் கால் எடுத்து வைத்தார்கள்.

“அண்ணே” என்று யாரோ ஒர் இளைஞன் கூப்பிட்டான்.

“அண்ணே! நீங்களும் அரண்மனைக்குத்தான் போகிறீர்களா? மெய்க்காப்பாளன் போட்டியில் கலந்து கொள்ளத்தானே...நான் கூட அதற்குத் தான் ஒட்டமாக ஓடிவருகிறேன்...எனக்கு மட்டும் இந்த வேலை கிடைத்துவிட்டால், அப்புறம் என் அம்மா எத்தனை சந்தோஷப்படுவாள் தெரியுமா?... பிரகதீசுவரர் சுவாமிதான் கருணை பொழிய வேண்டும்...’ என்றான் நாலாவது இளைஞனான மாணிக்கம்.

மூன்று புலிகளும் அவ்விளைஞனையே விழித்துப் பார்த்தார்கள்; 'இவனுக்காவது மெய்க் காப்பாளன் வேலை கிடைக்கவாவது' என்ற அர்த்தத்தில் கேலிப் புன்னகை புரிந்தார்கள். மாணிக்கத்தைச் சட்டை செய்யாமல், மூவரும் நடையைக் கட்டிவிட்டார்கள். இளைஞனுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.