பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மாக எண்ணமிட்டது. அவை பயப்படுவதன் காரணத்தையும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது.

அதற்குள் முயல்கள் திரும்பவும் வந்துவிட்டன. "முயல்களே, நீங்கள் இப்படி ஓடினால் காட்டைச் சுற்றிச் சுற்றித்தானே வரமுடியும்? புதிதாக எங்காவது தப்பி ஓட முடியுமா? நான் சொல்லுவதை நிதானமாகக் கேளுங்கள்" என்று உரத்த சத்தத்தில் கத்திற்று.

அதைக் கேட்டுக்கொண்டே முயல்களும் மற்ற விலங்குகளும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தன. இப்படி அவை மேலும் நான்கு முறைசுற்றி வந்துவிட்டன. ஒவ்வொரு தடவையும் கடக்கிட்டி முடக்கிட்டி, “நில்லுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று முழங்கிக் கொண்டே இருந்தது.

ஐந்தாவது தடவையாக முயல்கள் ஓடி வரும்போதுதான், கடக்கிட்டி முடக்கிட்டி ஒரே இடத்தில் யாதொரு தீங்குமில்லாமல் நிற்பதை அவை உணரத் தொடங்கின. அதனால் முயல்கள் தைரியமடைந்து, கொஞ்ச நேரம் நின்று. அதன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்க நினைத்தன. அவைகளுக்கு ஓடி ஓடிக் களைப்பும் அதிகமாகிவிட்டது.

"எங்கே ஓடுகிறீர்கள்?" என்று கடக்கிட்டி முடக்கிட்ட முயல்களைப் பார்த்துக் கேட்டது.