பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

"பூமி கீழே விழுகிறது! நாங்கள் தப்பிப் பிழைக்க ஓடுகிறோம்” என்று முயல்கள் பதில் அளித்தன.

"ஆமாம், தப்பிப் பிழைக்கவேண்டுமானால் இந்தக் காட்டைவிட்டுவேறு எங்காவது ஓட வேண்டும். இந்தக் காட்டைச் சுற்றிச் சுற்றித்தானே நீங்கள் ஓடுகிறீர்கள்? அப்படிச் செய்தால் தப்பிப் பிழைக்க முடியுமா?"

இதற்குள் மற்ற விலங்குகளும் அங்கே வந்து கூடிவிட்டன. அவைகளும் கடக்கிட்டி முடக்கிட்டியின் பேச்சைக் கவனமாகக் கேட்கத் தொடங்கின.

"ஐந்து முறை நீங்கள் சுற்றிச்சுற்றி ஓடியதை நான் இந்த இடத்திலேயே நின்று கொண்டு பார்த்தேன். நான் உங்களைப் போல ஓடவில்லை. எனக்கு ஒன்றும் தீங்கு வரவில்லையே! எதற்காக இப்படிப் பயப்பட்டு ஓடத் தொடங்கினீர்கள்?" என்று கடக்கிட்டி முடக்கிட்டி மறுபடியும் கேட்டது.

“அதென்னவோ, பூமி கீழே விழுகிறதாகக் கரடிகள் சொல்லித்தான் நாங்கள் ஓடத் தொடங்கினோம்” என்று சிறுத்தைகளும் புலிகளும் பதில் தெரிவித்தன.

"எங்களுக்குத் தெரியாது. மான்கள் சொல்லித்தான் நாங்கள் ஓடுகிறோம்" என்றன கரடிகள்.