பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ரோல்டான் தனியாகச் சில ஊர்களை வசப்படுத்திக் கொண்டு தனியாட்சி நடத்துகிறான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அரசரும் அரசியாரும் மிகக் கவலைப் பட்டார்கள். குடியேற்ற நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தைப் போக்குவதற்காக மிகுந்த அதிகாரங்கள் கொடுத்து பிரான்சிஸ்கொ டி போபடில்லா என்பவனை ராயல் கமிஷனராக நியமித்து இந்தியத் தீவுகளுக்கு அனுப்பினார்கள். அவன் உடனடியாகப் புறப்பட்டு வந்திருந்தால், ரோல்டானுடன் கொலம்பஸ் சமாதானம் செய்துகொண்டு அமைதியாக இருந்த காலத்தில் வந்து சேர்ந்திருப்பான். நமக்கு இங்கே வேலையில்லை என்று பேசாமல் திரும்பிப் போயிருப்பான், ஆனால், அவன் புறப்படவே ஓராண்டு ஆயிற்று.

போபடில்லா புறப்பட்டு சாண்டா டோமிங்கோ வந்து சேர்ந்தபோது கொலம்பஸ் சகோதரர்கள் மூவரும் மூன்று இடத்தில் இருந்தனர். கொலம்பஸ் லாசா என்ற ஊரில் இருந்தான். பார்த்தலோமியோ சாரகுலாவில் இருந்தான். சாண்டாடோமிங்கோவில் நிர்வாகத் திறமை சிறிதுமற்ற டீகோ இருந்தான்.

போபடில்லா துறைமுகத்தில் வந்திறங்கி ஊருக்குள் நுழைந்ததும் முதலில் அவனுக்குக் காட்டப்பட்ட காட்சி ஏழு ஸ்பானியப் பிணங்கள் தொங்கிய ஒரு தூக்கு மரம்தான்! அவன் இன உணர்ச்சி மிக்கவன். அவனுக்கு ஸ்பானியர்களின் பிணங்களைப் பார்த்தவுடன் இரத்தம் கொதித்தது. அவன் இது குறித்து டீகோவை என்ன என்று கேட்டபோது அவன், "நாளை இன்னும் ஐந்து பேர் தூக்கிடத் தயாராக வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றான், சிரித்துக்கொண்டே அவன் சொல்லிய இந்தச் செய்தியைக் கேட்டுப் போபடில்லா ஆத்திரம் கொண்டான்.