பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

விட்டார் போலும், அதுமட்டுமல்ல, இந்தப் புயலுக்குக் கொலம்பசும் தன் நான்கு கப்பல்களோடு தப்பிவிட்டான்.

சாண்டோ டோமிங்கோவில், அவன் தங்க ஓவாண்டோ அனுமதி மறுத்துவிட்டான். ஆகவே கொலம்பஸ் சாண்டா டோமிங்கோவிற்கு மேற்கே சிறிது தூரத்தில் உள்ள ரியோ ஜயினா ஆற்று முகவாயிலை அடைந்தான்! அந்த இடம் புயலுக்கு மறைவிடமாயிருக்கும் என்று அவன் கணித்தபடியே நடந்தது. மோனாவழியில் புயல் சீறியடித்தபோது ரியோ ஜயினா முகவாயிலில், காற்றின் அசைவுகூட இல்லாமலிருந்தது!

ஆனால், இரவில் வடகாற்றுச் சீறியடித்தது! அதன் கோபத்திற்கு ரியோ ஜயினா முகவாயிலும் ஆளாயிற்று. கொலம்பசின் கப்பல்கள் காற்று வேகத்தில் நங்கூரத்தை அறுத்துக்கொண்டு கடல்வெளியில் தள்ளுண்டு சென்றன. கப்பல்கள் பக்கத்துக்கொன்றாகப் பிரிந்து சென்றன. இருந்தாலும், திறமையும், ஊக்கமும் சுறுசுறுப்பும் உடைய இளம் மாலுமிகளின், விழிப்புணர்ச்சி மிக்க உழைப்பாலும் கடலனுபவத் திறத்தாலும், நான்கு கப்பல்களுமே காற்றை சமாளித்துத் தப்பிவிட்டன. ஒவ்வொரு கப்பலிலும் இருந்தவர்கள், மற்ற மூன்று கப்பல்களுமே மூழ்கிவிட்டன என்று எண்ணிக் கொண்டார்களாம்! ஆனால், ஒரு சிறு துறைமுகத்தில் ஜூலை மாதம் மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று அதிசயிக்கத்தக்க முறையில் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கப்பல்களும் வந்து சேர்ந்தனவாம். ஒரு கப்பலின் படகும், மூன்று கப்பல்களின் நங்கூரமும் உடைந்து போயின! இவை மட்டுமே பெரிய சேதங்களாம்!

பத்து நாள் அசுலா என்ற இடத்தில் தங்கியிருந்து பின் புறப்பட்ட கொலம்பஸ் ஜமைக்காவின் தென்கரை வழியாகச் சென்று கரீபியன் கடலைக் கடந்து சென்றான்.