பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

”கொலம்பஸ். இந்தத் தீவிலேயே நாடு கடத்தப்பட்டவனாக கிடக்கட்டும். வாருங்கள்! நாம் இஸ்பானியோலா நோக்கிப் புறப்படுவோம்" என்று போராஸ் சகோதரர்கள் கூட்டம் சேர்த்தார்கள். 48 பேர் கையில் கிடைத்த துப்பாக்கிகளுடன் புறப்பட்டார்கள்.

1504-ம் ஆம் ஆண்டுப் பிறப்புக்கு மறுநாள் ”ஸ்பெயின் செல்லுவோம்”; என்ற முழக்கத்துடன் பத்து ஓடங்களில் அவர்கள் கீழ்த்திசை நோக்கிப் புறப்பட்டார்கள். கரையோரமாகவே சென்ற அவர்கள் ஆங்காங்கே இருந்த சிற்றூர்களில் இறங்கி, சிவப்பு இந்தியர்களின் குடிசைகளில் புகுந்து கொள்ளையடித்தார்கள். கொள்ளை யடித்துக் கிடைத்த உணவுப் பொருள்களுடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள். பதினைந்து மைல் தூரம் தான் போயிருந்தார்கள். எதிர்க்காற்று அவர்களை மேலே போக விடாமல் தடுத்தது. ஓடங்கள் மூழ்கிவிடும் போலிருந்த நிலையில் கொள்ளையிட்ட பொருள்களைக் கடலுக்குள் எறிய வேண்டி நேரிட்டது. பளுவைக் குறைப்பதற்காகச் சில இந்தியத் துடுப்புக்காரர்களையும் கடலுக்குள் பிடித்துத் தள்ளினார்கள். மேற்கொண்டு போகவே முடியாதென்ற நிலையில் அருகில் இருந்த கரையில் ஒதுங்கினார்கள். மறுபடியும் இரண்டு முறை முயன்றும் காற்றை எதிர்த்துப் போக முடியவில்லை. ஓடங்களை விட்டுவிட்டுக் கரையோரமாக கால்நடையாக சாண்டா குளோரியாவுக்கே திரும்பிச் சென்று சேர்ந்தார்கள்.

இதற்கிடையில் கொலம்பசும், அவனிடம் பற்றுக் கொண்டு உடன் தங்கியவர்களும் பசியால் வாடும் நிலை ஏற்பட்டது. இந்தியர்களிடம் ரொட்டித் துண்டு வாங்கப் பயன்பட்ட பருந்து மணிகளும், சரிகைத் துண்டுகளும் தீர்ந்துவிட்டன. மேற்கொண்டு எப்படி உணவு பெறுவதென்று தெரியாமல் விழித்தார்கள்.