பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

கொலம்பஸ் ஒரு தந்திரம் செய்தான். அவனிடம் இருந்த நாட்பஞ்சாங்கத்தில், பிப்ரவரி மாதம் 29-ம் நாள் பூரண சந்திரக் கிரகணம் என்று குறிப்பிட்டிருந்தது இதைக் கண்டு கொண்ட கொலம்பஸ் பக்கத்து ஊர்களிலிருந்த சிவப்பு இந்திய இனத்தவர்களையெல்லாம் கிரகணத் தன்று வரவழைத்தான். கப்பல் தட்டுக்கு வந்த அவர்களிடம், தொடர்ந்து அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு உணவு கொடுத்துவர வேண்டுமென்பதே ஆண்டவனின் விருப்பம் என்று சொன்னான். அவ்வாறு கொடுக்காவிட்டால் ஆண்டவன் கோபம் கொள்ளுவார் : சந்தேகமிருந்தால் அன்றிரவு சந்திரனைக் கவனிக்கலாம் என்றுரைத்தான்.

சந்திரன் தோன்றியது. சிறிது நேரத்தில் கிரகணம் பீடிக்க ஆரம்பித்தது. சந்திரனை இருள் கவ்விப் பரவப் பரவ இந்தியர்களின் பீதி அதிகரித்தது. ஆண்டவன் சந்திரனையே அழித்து விடுவாரோ என்று பயந்தார்கள். இரவில் வெளிச்சம் இல்லாமலே போய்விடுமோ என்று நடுங்கினார்கள். கப்பல்கள் நின்ற இடத்திற்கு ஓடி வந்தார்கள்.

”நிறுத்துங்கள், நிறுத்துங்கள்! நீங்கள் சொல்கிற படியெல்லாம் கேட்கிறோம்" என்று கொலம்பசை வேண்டினார்கள். கொலம்பஸ் மலுக்கிக் கொண்டான். பேசாமல் கப்பல் அறையில் போய்ப் படுத்துக்கொண்டான். நேரத்திற்கு நேரம் வெளியில் இந்தியர்களின் பீதிக் கூச்சல் அதிகமாகிக் கொண்டிருந்தது. கிரகணம் விலக ஆரம்பிக் கும் நேரத்தில் கொலம்பஸ் வெளியில் வந்தான். "உங்கள் குறையை ஆண்டவனிடம் சொன்னேன் ; நீங்கள் எங்க ளுக்கு நாள்தோறும் உணவுப் பொருள்கள் கொடுப்பதாயிருந்தால் மன்னித்துச் சந்திரனை விட்டுவிடுவதாக இறைவன் கூறுகிறார்" என்றான்.