பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42



அக்டோபர் மாதம் 11-ம் நாள் முடிந்து நள்ளிரவில் 12-ம் நாள் தொடங்கியது. ஒருமணி ஆயிற்று இரண்டு மணியும் ஆயிற்று. அப்போது பிண்டாக் கப்பல் அதிகாரி ஒருவன் வெளியே எட்டிப் பார்த்தான். நிலவொளியில் செங்குத்தாய் நின்ற ஒரு வெள்ளைப் பாறை அவன் கண்ணில் தட்டுப்பட்டது. “தரை! தரை!” என்று கூவினான். உடனே அந்தக் கப்பல் தலைவனான அலோன் சோபின்சோன் மேல் தட்டுக்கு ஓடி வந்தான். ஆம் சந்தேகமில்லாமல் அது ஒரு பாறைதான்!

உடனே ஒரு துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டான். பாய்களைத் தாழ்த்தும்படி மாலுமிகளுக்கு உத்தரவிட்டான். கப்பலின் வேகம் குறைந்தது. அதற்குள் மற்ற இரு கப்பல்களும் வெகு வேகமாக அதை நெருங்கின. கொலம்பஸ் வெளியில் எட்டிப் பார்த்தான். சாண்டாமேரியாவில் இருந்தவாறே ஆனந்தமாகக் கூவினான். “அலோன்சோ! நீ தான் முதலில் கரையைக் கண்டுபிடித்தாய்! ஐயாயிரம் காசுகள் உனக்கு வெகுமதி யளிக்கிறேன்”

கொலம்பசின் குரலில் வெற்றிப் பெருமிதம் இழையோடியது! கண்ட கனவெல்லாம் நிறைவேறிவிட்டது என்னும் களிப்பு நிறைந்து வெளிப்பட்டது!

கப்பல்களில் இருந்த எல்லோருமே ஆனந்தக்கடலில் மிதந்து கொண்டிருந்தார்கள்!